சொக்கநாதப் பெருமானிடம் தருமி வேண்டியது என்ன? (திரைக்கதையும், உண்மை வரலாறும்)

1965ஆம் ஆண்டு வெளிவந்த, மிகப் பிரசித்தி பெற்ற; தலைசிறந்த பக்திப் படைப்பான 'திருவிளையாடல்' திரைப்படத்தில், திரைக்கதைச் சுவைக்காக தருமி எனும் இளைஞர் ஏதுமறியா ஒரு நகைச்சுவைப் பாத்திரமாகச் சித்திரிக்கப் பெற்றிருப்பார். இனி இப்பதிவில் பரஞ்சோதி முனிவர் அருளியுள்ள 'திருவிளையாடல் புராணம்' எனும் பிரமாண நூலின் வாயிலாக, இந்நிகழ்வின் மெய்மையான வரலாற்றினை அறிந்து மகிழ்வோம், 

(1)
ஆதிசைவ இளைஞரான தருமி என்பார் சொக்கநாதப் பரம்பொருளின் திருமுன்பு சென்று, 'எந்தையே, தந்தை; தாயற்றவனாய் வாழ்ந்து வரும் அடியேனுக்குத் திருமண விருப்பமிருந்தும் அதற்கான பொருளின்றி வருந்துகின்றேன். அவ்வறுமை நோய் தீர்வதற்கோர் வாய்ப்பு இச்சமயத்தில் அமைந்துள்ளது ஐயனே' என்று உளமுருக விண்ணப்பிக்கத் துவங்குகின்றார், 

(திருஆலவாய்க் காண்டம் - தருமிக்குப் பொற்கிழி அளித்த படலம் - திருப்பாடல் 2516)
தந்தை தாயிலேன் தனியனாகிய 
மைந்தனேன் புது வதுவை வேட்கையேன் 
சிந்தை நோய் செயும் செல்லல் தீர்ப்பதற்(கு) 
எந்தையே இது பதமென்(று) ஏத்தியே

(2)
'வேதநூல்களையும்; எண்ணில் பல சிவாகமங்களையும் முழுமையாகக் கற்றுணர்ந்தும், திருமண வேள்வி நடந்திராத காரணத்தால் உன் திருமேனியைத் தீண்டிப் பூசிக்கும் பேற்றினையும் உடையேன் அல்லேன்' என்று மேலும் தொடர்கின்றார் தருமி (ஆதலின் தருமி 'மகா பண்டிதர்' என்பது இத்திருப்பாடலில் இருந்து தெள்ளென விளங்கும்) , 

(திருஆலவாய்க் காண்டம் - தருமிக்குப் பொற்கிழி அளித்த படலம் - திருப்பாடல் 2517)
நெடிய வேதநூல் நிறைய ஆகமம் 
முடிய ஓதிய முறையினில் நிற்கெனும் 
வடிவில் இல்லற வாழ்க்கையின்றி நின் 
அடி அருச்சனைக்(கு) அருகன் ஆவனோ

(3)
'ஐயனே, உன் திருவுள்ளம் யாவும் அறியுமே. அடியவன் உய்வு பெறுமாறு, பாண்டிய வேந்தனின் உள்ளக் கருத்துணர்ந்து; ஒரு கவியினைப் புனைந்து அதனை அடியேனுக்கு உரைத்தருள வேண்டும்' என்று அகம் குழைந்து ஆதிப்பரம்பொருளாம் சொக்கநாத வள்ளலிடம் வேண்டுகின்றார் (ஆதலின் 'இறைவரே நேரடியாகத் தோன்றி கவியொன்றை அளித்தருள வேண்டும்' என்று வேண்டுவது தருமியின் திடபக்தியைப் பறைசாற்றுகின்றது),

(திருஆலவாய்க் காண்டம் - தருமிக்குப் பொற்கிழி அளித்த படலம் - திருப்பாடல் 2518)
ஐய யாவையும் அறிதியே கொலாம் 
வையை நாடவன் மனக் கருத்துணர்ந்(து)
உய்யவோர் கவி உரைத்(து) எனக்கருள் 
செய்ய வேண்டும் என்றிரந்து செப்பினான்

(4)
அடியற்கு எளியராம் நம் சோமசுந்தரப் பெருங்கடவுள் தருமியின் பால் கருணைத் திருநோக்கம் புரிந்தருள்கின்றார். 'கொங்கு தேர் வாழ்க்கை' எனும் கவியொன்றினைப் புனைந்து, அதனைத் தன் திருவாக்காலேயே படித்தருளிப் பின்னர் தருமிக்கு அளித்தருள, தருமி சொக்கநாதப் பெருமானை இறைஞ்சி அக்கவியைப் பெற்றுக் கொள்கின்றார் (என்னே தருமியின் தவம்). 

(திருஆலவாய்க் காண்டம் - தருமிக்குப் பொற்கிழி அளித்த படலம் - திருப்பாடல் 2519)
தென்னவன் குல தெய்வமாகிய 
மன்னர் கொங்கு தேர் வாழ்க்கை இன்தமிழ் 
சொல்நலம் பெறச் சொல்லி நல்கினார் 
இன்னல் தீர்ந்தவன் இறைஞ்சி வாங்கினான்

(இறுதிக் குறிப்பு): 
பின்னாளில் நம் அப்பர் சுவாமிகளின் திருவாக்கில் தருமி இடம் பெறுவாராகில், அந்த உத்தம சீலர் சொக்கநாதப் பெருமான்பால் கொண்டிருந்த அடிமைத் திறத்தினை என்னென்று போற்றுவது, 

('புரிந்தமரர் தொழுதேத்தும்' என்று துவங்கும் திருப்புத்தூர் தேவாரம் - திருப்பாடல் 3)
நன்பாட்டுப் புலவனாய்ச் சங்கமேறி
    நற்கனகக் கிழி தருமிக்(கு) அருளினோன் காண்

No comments:

Post a Comment