4ஆம் திருமுறையில் தட்சிணாமூர்த்தியின் திருநாமம் (அப்பர் தேவார நுட்பங்கள் - பகுதி 8 )

பிரம்ம புத்திரர்களான சனகர்; சனாதனர்; சனற்குமாரர்; சனந்தனர் ஆகியோர் பொதுவில் சனகாதியர் என்று குறிக்கப் பெறுவர். இந்நால்வர்க்கும் சிவபரம்பொருள் தென்திசை நோக்கி எழுந்தருளி இருந்து, சின்முத்திரையுடன் ரிக்; யஜுர்; சாம; அதர்வண வேத சாரங்களை உபதேசித்து அருளிய புராதன நிகழ்வினை நம் நாவுக்கரசு சுவாமிகள் பல்வேறு திருப்பாடல்களில் பதிவு செய்து போற்றியுள்ளார். 

(1)
(திருக்கச்சி ஏகம்ப தேவாரம்: 'கரவாடும் வன்னெஞ்சர்க்(கு) அரியானை' - திருப்பாடல் 4)
விரித்தானை நால்வர்க்கு வெவ்வேறு வேதங்கள்

(2)
(திருமால்பேறு தேவாரம்: 'பொருமாற்றின்படை' - திருப்பாடல் 2)
ஆலத்தார் நிழலில்அற நால்வர்க்குக்
கோலத்தால் உரை செய்தவன்

(3)
(திருநல்லூர் தேவாரம்: 'நினைந்துருகும் அடியாரை' - திருப்பாடல் 4)
சொல்லருளி அறம் நால்வர்க்(கு) அறிய வைத்தார்

இவ்வுபதேச நிகழ்வினை குறிக்கும் திருப்பாடல் வரிகள் யாவுமே, இறைவரின் திருநாமமின்றிப் பொதுவான தன்மையிலேயே அமைக்கப் பெற்றிருக்கும். எனினும் அரிதினும் அரிதாகப் பின்வரும் திருவதிகை தேவாரத் திருப்பாடலில் 'தக்கணா போற்றி' என்று நம் சுவாமிகள் அருளிச் செய்துள்ளது எண்ணி இன்புறத் தக்கதொரு குறிப்பாகும்,  

(திருவதிகை தேவாரம்: 'எல்லாம் சிவனென்ன நின்றாய் போற்றி' - திருப்பாடல் 10) 
முக்கணா போற்றி முதல்வா போற்றி
    முருகவேள் தன்னைப் பயந்தாய் போற்றி
தக்கணா போற்றி தருமா போற்றி
    தத்துவனே போற்றிஎன் தாதாய் போற்றி
தொக்கணா என்றிருவர் தோள்கை கூப்பத்
    துளங்கா(து) எரிசுடராய் நின்றாய் போற்றி
எக்கண்ணும் கண்ணிலேன் எந்தாய் போற்றி
    எறிகெடில வீரட்டத்(து) ஈசா போற்றி

No comments:

Post a Comment