ஸ்ரீஆதிவராக மூர்த்தி வழிபட்ட இரு சிவத்தலங்கள்:

ஸ்ரீமன் நாராயண மூர்த்தியின் தசாவதார நிகழ்வுகள் எண்ணிறந்த தேவாரப் பனுவல்களில் குறிக்கப் பெற்றுள்ளன. 'ஆகம் பத்து  அரவணையான்' என்று நம் அப்பர் சுவாமிகள் தசாவதாரங்களைக் குறிக்கின்றார்,

('கரவாடும்' எனும் திருக்கச்சி ஏகம்பத் திருப்பதிகம்: திருப்பாடல் 9)
ஆகம்பத்து அரவணையான் அயன் அறிதற்கரியானைப்
பாகம் பெண்ஆண் பாகமாய் நின்ற பசுபதியை
மாகம்ப மறையோதும் இறையானை, மதிற்கச்சி
ஏகம்ப மேயானை என்மனத்தே வைத்தேனே

இனி இப்பதிவில் சிவபுரம்; சீகாழி முதலிய தலங்களில் ஸ்ரீவராக மூர்த்தி வழிபட்டதற்கான திருமுறைச் சான்றுகளைக் காண்போம், 

(1)
பின்வரும் சிவபுரத் திருப்பாடலில் 'தன் திருமுகத்திலுள்ள கோரப்பல்லின் நுனியில் இப்புவியைச் சுமந்து அதனை நிலைநிறுத்திக் காத்தருளிய ஸ்ரீவராக மூர்த்தி வழிபாடு செய்த சிவபுரம்' என்று சம்பந்தச் செல்வர் போற்றுகின்றார் ('எயிறதன் உதிமிசை இதம்அமர் புவிஅது நிறுவிய எழில்அரி வழிபட அருள்செய்த'),    

('புவம்வளி' எனும் சிவபுரத் திருப்பதிகம் - திருப்பாடல் 7):
கதமிகு கருஉருவொடு உகிரிடை வடவரை கணகணவென
மதமிகு நெடுமுகன் அமர்வளை மதிதிகழ் எயிறதன் உதிமிசை
இதம்அமர் புவிஅது நிறுவிய எழில்அரி வழிபட அருள்செய்த
பதமுடை அவனமர் சிவபுரம் நினைபவர் நிலவுவர் படியிலே

(2)
பின்வரும் மற்றொரு சிவபுரத் திருப்பாடலில், 'வென்றிகொள் எயிற்று வெண்பன்றி முன்னாள் சென்றடி வீழ்தரு சிவபுரமே' என்று குறிக்கின்றார் சம்பந்தப் பெருமானார்,

('இன்குரலிசை' எனும் சிவபுரத் திருப்பதிகம் - திருப்பாடல் 2)
அன்றடல் காலனைப் பாலனுக்காய்ப்
பொன்றிட உதைசெய்த புனிதன்நகர்
வென்றிகொள் எயிற்று வெண்பன்றி முன்னாள்
சென்றடி வீழ்தரு சிவபுரமே

(3)
பின்வரும் சீகாழித் திருப்பாடல் கடினப் பதங்களைக் கொண்டது, இறுதி இரு வரிகளில், 'ஸ்ரீவராக மூர்த்தி, இரண்யாட்சனை சம்ஹாரம் புரிந்தருளிய பழி தீர, சீகாழித் திருத்தலத்தில் வழிபாடு செய்த நிகழ்வினை' நம் சம்பந்தப் பெருமானார் பதிவு செய்கின்றார், 

('சுரர்உலகு' எனும் சீகாழித் திருப்பதிகம் - திருப்பாடல் 6)
நிராமய பராபர புராதன பராவுசிவ, ராகஅருள்என்று
இராவும்எதிராயது பராநினை புராணனன் அமர்ஆதி பதியாம்
அராமிசை இராதஎழில் தராய, அர பராயண வராகஉரு !வா
தராயனை, விராயெரி பராய்மிகு தராய்மொழி விராய பதியே

No comments:

Post a Comment