நக்கீரர் பொற்றாமரைக் குளத்திலிருந்து உயிர்பெற்று வெளிவந்த பின்னர் நிகழ்ந்தது என்ன? (அரிதினும் அரிதான திருவிளையாடல் புராணக் குறிப்புகள்)

ஆலவாய் முதல்வரின் நெற்றிக்கண் சுடரினால் நக்கீரனார் வெந்து பொடியாகிக் கரைய, இறையனாரும் திருவுருவம் மறைகின்றார். அது கண்டு பாண்டிய வேந்தனும் மற்றுமுள்ள சங்கப் புலவர்களும் பதறி, சோமசுந்தரப் பரம்பொருளிடம் பிழைபொறுக்குமாறு மன்றாடியவாறே, ஆலவாய்த் திருக்கோயிலுக்கு விரைகின்றனர். . 

அச்சமயம் பொற்றாமரைக் குளத்தருகே ஆலவாய்ப் பரம்பொருள் மதுரைப் பேரரசியான தன் காதலியாருடன் (யாவரும் காணுமாறு) திருக்காட்சி தந்தருள்கின்றார். பின் இறைவர் குளத்தைப் பார்த்தருள, நக்கீரப் பெருந்தகையார் கர்ம தேகம் நீங்கப் பெற்றுச் சிவமூர்த்தி அருளிய தூயதோர் திருமேனியுடன் வெளிப்படுகின்றார். இறையவர் தன் திருக்கரங்களால் நக்கீரரைப் பற்றிக் கரையேற்றுகின்றார் (ஆ, என்னே கருணை! இம்மூர்த்தியன்றி நமைக் கரையேற்றுவாரும் உளரோ?). 

(1)
நக்கீரர் தன்வயமற்றவராய் இறைவரையும் மீனாட்சி அம்மையையும் பன்முறை பணிந்தெழுந்து, பிழைபொறுக்குமாறு வேண்டி விண்ணப்பித்து 'கயிலை பாதி; காளத்தி பாதி' எனும் பனுவலால் அம்பிகை பாகனாரைப் பணிந்தேத்துகின்றார் (இப்பனுவல் 11ஆம் திருமுறையில் இடம்பெறுகின்றது). பின்னர் பின்வரும் 7 திருப்பாடல்களால் இறைவரின் அருட்செயல்களை ஒவ்வொன்றாகப் பட்டியலிட்டுப் போற்றி செய்கின்றார், 

(தருமிக்குப் பொற்கிழி அளித்த படலம் - திருப்பாடல் 2554)
அறனிலான் இழைத்த வேள்வி அழித்த பேராண்மை போற்றி 
மறனிலாச் சண்டிக்கீந்த மாண்பெரும் கருணை போற்றி 
கறுவிவீழ் கூற்றைக் காய்ந்த கனைகழல் கமலம் போற்றி 
சிறுவனுக்கழியா வாழ்நாள் அளித்தருள் செய்தி போற்றி

(தருமிக்குப் பொற்கிழி அளித்த படலம் - திருப்பாடல் 2555)
சலந்தரன் உடலம் கீண்ட சக்கரப் படையாய் போற்றி 
வலந்தரும் அதனை மாயோன் வழிபடக் கொடுத்தாய் போற்றி 
அலர்ந்த செங்கமலப் புத்தேள் நடுச்சிரம் அரிந்தாய் போற்றி 
சிலந்தியை மகுடம் சூட்டி அரசருள் செல்வம் போற்றி

(தருமிக்குப் பொற்கிழி அளித்த படலம் - திருப்பாடல் 2556)
திரிபுரம் பொரிய நக்க சேவகம் போற்றி மூவர்க்(கு)
அருளிய தலைமை போற்றி; அனங்கனை ஆகம் தீய 
எரியிடு நயனம் போற்றி; இரதி வந்திரப்ப மீளக் 
கரியவன் மகனுக்காவி உதவிய கருணை போற்றி

(தருமிக்குப் பொற்கிழி அளித்த படலம் - திருப்பாடல் 2557)
நகைத்தட வந்த வந்த நகுசிரம் திருகி வாங்கிச் 
சிகைத்திரு முடிமேல் வைத்த திண் திறல் போற்றி; கோயில் 
அகத்தவி சுடரைத் தூண்டும் எலிக்(கு) அரசாள மூன்று 
சகத்தையும் அளித்த தேவர் தம்பிரான் சரணம் போற்றி

(தருமிக்குப் பொற்கிழி அளித்த படலம் - திருப்பாடல் 2558)
பொருப்(பு) அகழ்ந்தெடுத்தோன் சென்னி புயமிற மிதித்தாய் போற்றி 
இருக்கிசைத்(து) அவனே பாட இரங்கி வாள் கொடுத்தாய் போற்றி 
தருக்கொடும் இருவர் தேடத் தழல் பிழம்பானாய் போற்றி 
செருக்கு விட்டவரே பூசை செய்யநேர் நின்றாய் போற்றி

(தருமிக்குப் பொற்கிழி அளித்த படலம் - திருப்பாடல் 2559)
பருங்கைமால் யானை ஏனம் பாய் புலி அரிமான் மீனம் 
இருங்குறள் ஆமை கொண்ட இகல்வலி கடந்தாய் போற்றி 
குரங்கு பாம்பெறும்பு நாரை கோழியாண் அலவன் தேரை 
கருங்குரீஇ கழுகின் அன்புக்கிரங்கிய கருணை போற்றி

(தருமிக்குப் பொற்கிழி அளித்த படலம் - திருப்பாடல் 2560)  
சாலநான் இழைத்த தீங்குக்(கு) என்னையும் தண்டம்செய்த 
கோலமே போற்றி; பொல்லாக் கொடியனேன் தொடுத்த புன்சொல் 
மாலை கேட்டென்னை ஆண்ட மலைமகள் மணாள போற்றி 
ஆலவாய் அடிகள் போற்றி அம்மைநின் அடிகள் போற்றி

(2)
இதன் பின்னர் 'கோபப் பிரசாதம்' எனும் பனுவலால் அம்மையப்பரை துதிக்கின்றார் (இத்தொகுப்பும் 11ஆம் திருமுறையில் இடம்பெறுகின்றது),

(தருமிக்குப் பொற்கிழி அளித்த படலம் - திருப்பாடல் 2561)  
ஆஅலந்தனேன் அடியனேற்(கு) அருளருள் என்னாக் 
கோவமும் பிரசாதமும் குறித்துரை பனுவல் 
பாஅலங்கலால் பரனையும் பங்கில் அங்கையற்கண் 
பூவை தன்னையும் முறை முறை போற்றி என்றேத்தா

(3)
இதன் தொடர்ச்சியாய், 'பெருந்தேவ பாணி; திருஎழுகூற்றிருக்கை' எனும் பாமாலைகளால் உமையொரு பாகனாரை மேலும் போற்றி செய்கின்றார், (இத்தொகுப்பும் 11ஆம் திருமுறையில் இடம்பெறுகின்றது),

(தருமிக்குப் பொற்கிழி அளித்த படலம் - திருப்பாடல் 2562) 
தேவதேவனைப் பின்பெரும் தேவ பாணியொடும் 
தாவிலேழ்இசை ஏழுகூற்றிருக்கையும் சாத்திப் 
பூவர் சேவடி சென்னிமேல் பூப்ப வீழ்ந்தெழுந்தான் 
பாவலோர்களும் தனித்தனி துதித்தனர் பணிந்தார்

(இறுதிக் குறிப்பு):
மதுரைத் திருக்கோயிலைத் தரிசிக்கச் செல்லுகையில், நக்கீரனார் அருளியுள்ள, மேற்குறித்துள்ள 7 போற்றித் திருப்பாடல்களையும், 'கயிலை பாதி காளத்தி பாதி', 'கோபப் பிரசாதம்', 'பெருந்தேவ பாணி', 'திருஎழுகூற்றிருக்கை' ஆகிய தொகுப்புகளையும்,  பொற்றாமரைக் குளப்படிகளில் அமர்ந்தவாறு பாராயணம் புரிந்து, அம்மையப்பரின் பரிபூரணத் திருவருளுக்கு உரியராவோம்.

No comments:

Post a Comment