பன்னிரு சைவத் திருமுறைகளும் திருமுறை ஆசிரியர்களும்:

சைவத் திருமுறைகள் பன்னிரண்டுள், முதல் 11 திருமுறைகள் வரை தொகுக்கப் பெற்ற காலம் 11ஆம் நூற்றாண்டு, தொகுத்தருளியவர் திருநாரையூரில் தோன்றிய 'நம்பியாண்டார் நம்பிகள்' எனும் அருளாளராவார்.

பின்னர் 12ஆம் நூற்றாண்டில் தெய்வச் சேக்கிழார் அருளிச் செய்த 'பெரிய புராணம்' எனும் 'திருத்தொண்டர் புராணம்' 12ஆம் திருமுறையாகச் சேர்க்கப் பெறுகின்றது.

இப்பன்னிரு திருமுறைகளையும் அருளிச் செய்தோர் மொத்தம் 27 அருளாளர்கள், 27 நட்சத்திரங்களைப் போன்று சைவ வானில் ஒளிர்பவர்கள்.

1, 2, 3 திருமுறைகள் (தேவாரம்):

திருஞானசம்பந்தர் அருளியவை.

4, 5, 6 திருமுறைகள் (தேவாரம்):

நாவுக்கரசு சுவாமிகள் (அப்பர் அடிகள்) அருளியவை.

7ஆம் திருமுறை (தேவாரம்):

சுந்தரமூர்த்தி நாயனார் அருளியது.

8ஆம் திருமுறை (திருவாசகம், திருக்கோவையார்):

மாணிக்கவாசகர் அருளியவை.

9ஆம் திருமுறை (திருவிசைப்பா, திருப்பல்லாண்டு):

இதன் திருப்பாடல்களை அருளிச் செய்துள்ளோர் மொத்தம் 9 அருளாளர்கள்.

1.திருமாளிகைத் தேவர்
2.சேந்தனார்
3.கருவூர்த்தேவர்
4.பூந்துருத்தி நம்பி
5.கண்டராதித்தர்
6.வேணாட்டடிகள்
7.திருவாலியமுதனார்
8.புருடோத்தம நம்பி
9.சேதிராயர்

இவற்றுள் திருப்பல்லாண்டினைச் சேந்தனாரின் திருப்பாடல்களும், 'திருவிசைப்பா' எனும் தொகுப்பில்  சேந்தனார் உள்ளிட்ட 9 ஆசிரியர்களின் திருப்பாடல்களும் இடம்பெறுகின்றன. 

10ஆம் திருமுறை (திருமந்திரம்):

திருமூலர் அருளியது.

11ஆம் திருமுறை (பொதுப் பாடல்களின் தொகுப்பு):

இதனை அருளிச் செய்துள்ளார் மொத்தம் 12 ஆசிரியர்கள்.

1. திருஆலவாய் உடையார்
2. காரைக்கால் அம்மையார்
3. ஐயடிகள் காடவர்கோன்
4. சேரமான் பெருமாள்
5. நக்கீரதேவர்
6. கல்லாடதேவர்
7. கபிலதேவர்
8. பரணதேவர்
9. இளம்பெருமான் அடிகள்
10. அதிரா அடிகள்
11. பட்டினத்துப் பிள்ளையார்
12. நம்பியாண்டார் நம்பிகள்

12ஆம் திருமுறை (பெரிய புராணம்):

சேக்கிழார் பெருமான் அருளியது.

திருமுறை ஆசிரியர்களின் பாராயணத் துதி:

திருஞானசம்பந்தர் வாகீசர் சுந்தரர்
திருவாதவூரர் மற்றைத்
திருமாளிகைத் தேவர் சேந்தனார் கருவூரர்
தெள்ளுபூந்துருத்தி நம்பி
வருஞான கண்டராதித்தர் வேணாட்டடிகள்
வாய்ந்த திருவாலியமுதர்
மருவு புருடோத்தமர் சேதிராயர் மூலர்
மன்னு திருஆலவாயர்
ஒரு காரைக்காலம்மை ஐயடிகள் சேரமான்
ஒளிர்கீரர் கல்லாடனார்
ஒண் கபிலர் பரணர் மெய்உணர் இளம்பெருமானோடு
ஓங்கும் அதிராஅடிகளார்
திருமேவு பட்டினத்(து) அடிகளொடு
நம்பியாண்டார் நம்பி சேக்கிழாரும்
சிவநெறித் திருமுறைகள் பன்னிரண்டு அருள்செய்த
தெய்விகத் தன்மையோரே.

திருமூலர் தோன்றிய காலம் என்ன? (ஆதார பூர்வ விளக்கங்கள்):

திருமூலர் 63 நாயன்மார்களுள் ஒருவராகப் போற்றப் பெறுபவர் என்பதும், பன்னிரு சைவத் திருமுறைகளுள் 10ஆம் திருமுறையான திருமந்திரத்தின் ஆசிரியர் என்பதும் அனைவரும் அறிந்ததே. இனி திருமூலர் தோன்றிய காலம் குறித்து இப்பதிவினில் சிந்தித்துத் தெளிவுறுவோம்.

7ஆம் நூற்றாண்டின் இறுதியில் அவதரித்த சுந்தர மூர்த்தி நாயனார் தமது திருத்தொண்டர் தொகையில் 'நம்பிரான் திருமூலன் அடியார்க்கும் அடியேன்' என்று போற்றுகின்றார். ஆதலின் திருமூல நாயனார் 7ஆம் நூற்றாண்டிற்கு முன் தோன்றிய அருளாளர் எனும் முடிவிற்கு எளிதாக வந்து விடலாம்.

இனி பெரிய புராணத்தில், 'திருமூல தேவ நாயனார்' பகுதியில் இடம்பெறும் பின்வரும் இரு திருப்பாடல்களில், திருமூலரின் அவதார காலக் குறிப்புகளைக் காண்போம்,

திருமூலர் ஆண்டொன்றிற்கு ஒரு திருப்பாடல் வீதம் '3000 திருப்பாடல்களைக் கொண்ட திருமந்திரத் தொகுப்பினை நிறைவு செய்துள்ளார்' என்று தெய்வச் சேக்கிழார் பின்வரும் திருப்பாடலில் பதிவு செய்கின்றார்,

(பெரிய புராணம்: திருமூல தேவ நாயனார் புராணம்: திருப்பாடல் 26):
ஊனுடம்பில் பிறவிவிடம் தீர்ந்துலகத்தோர் உய்ய
ஞானமுதல் நான்குமலர் நல் திருமந்திரமாலை
பான்மைமுறை ஓராண்டுக்கொன்றாகப் பரம்பொருளாம்
ஏன எயிறணிந்தாரை ஒன்றவன் தானென எடுத்து!!!

'திருமூல நாயனார் இப்புவியில் 3000 ஆண்டுகள் வாழ்ந்திருந்து, 3000 தமிழ்ப் பாமாலைகள் புனைந்துப் பின்னர் சிவமுத்திப் பதம் பெற்றுத் திருக்கயிலை ஏகினார்' என்று பின்வரும் திருப்பாடலில் ஐயத்திற்கு இடமின்றி மற்றொரு முறை பதிவு செய்கின்றார் சேக்கிழார் அடிகள்,

(பெரிய புராணம்: திருமூல தேவ நாயனார் புராணம்: திருப்பாடல் 27):
முன்னியஅப் பொருள்மாலைத் தமிழ்மூவாயிரம் சாத்தி
மன்னிய மூவாயிரத்தாண்டு இப்புவிமேல் மகிழ்ந்திருந்து
சென்னி மதியணிந்தார் தம் திருவருளால் திருக்கயிலை
தன்னில்அணைந்து ஒருகாலும் பிரியாமைத் தாளடைந்தார்.

ஆதலின் திருமூல நாயனார் இன்றிலிருந்து சுமார் 5000 ஆண்டுகளுக்கு முன்னரே (அதாவது தற்பொழுது நடந்தேறி வரும் கலியுகத்தின் துவக்க கால கட்டத்திலேயே) தோன்றியுள்ளார்' என்பது தெளிவு. 

எம்பிராட்டி திலகவதியாரைப் போற்றும் நாவுக்கரசு சுவாமிகள் (அப்பர் தேவார நுட்பங்கள் - பகுதி 1):

இளம் பிராய நிகழ்வுகளை முதற்கண் நினைவு கூர்ந்துப் பின்னர் தன் தமக்கையாரின் தவமேன்மைச் சிறப்பினால் 'சிவமூர்த்தியின் திருவருளுக்கு தான் உரியரான நிகழ்வினை' இத்திருப்பாடலில் பதிவு செய்து போற்றுகின்றார் திருத்தாண்டக வேந்தர்,

('கொக்கரை குழல்' என்று துவங்கும் ஆரூர் திருப்பதிகம் - திருப்பாடல் 6) 
எம்மையார்இலை யானும் உளேன்அலேன்
எம்மையாரும் இதுசெய வல்லரே
அம்மை யார் எனக்கென்(று) அரற்றினேற்(கு)
அம்மையாரைத் தந்தார் ஆரூர் ஐயரே!!!

(பொருள்)
இளம் பிராயத்திலேயே தாய்; தந்தையரை இழந்தேன், சிறு வயதினன் ஆதலின் இவ்வுலக வாழ்வைத் தனித்து எதிர்கொள்ளும் திறமின்றி இருந்தனன். எம் தமக்கையார் யாவுமாய் விளங்கி எம்மைக் காத்தருள வல்லவரே, எனினும் அவரும் இச்சமயம் 'தன் இன்னுயிர் துறப்பேன்' என்று துணிந்துள்ளார் (நிச்சயிக்கப் பெற்ற மணமகன் இறந்துபட்ட காரணத்தால்). 

'இனி அம்மையப்பராய் இருந்து எம்மைக் காப்பார் யாருளர்? என்று கதியற்றுப் பதறியிருந்த நேரத்தில், பின்னாளில் எம்மைப் புறச்சமய நெறியினின்றும்  நீக்கிச் சிவமாம் மெய்நெறிக்கு ஆட்படுத்த வேண்டியிருந்த காரணத்தால், திலகவதியாரைத் துறவு நெறியில் செலுத்தி, தாய்;தந்தை; குரு என்று யாவுமாய் விளங்குமாறு மீண்டும் அப்பிராட்டியாரை எமக்கு அளித்தருளினார் ஆரூர் இறையவர்' என்று போற்றுகின்றார் நம் அப்பர் சுவாமிகள். 

எண்ணுந்தோறும் எண்ணுந்தோறும் நெகிழ்விக்கும் திருப்பாடல் வரிகள் இவை. ஆழிமிசைக் கல்மிதப்பில் அணைந்த பிரான் அடி போற்றி!!!

திருநாவுக்கரசர் திருப்பாடல்களில் ஆறுமுகக் கடவுள் பற்றிய அற்புதக் குறிப்புகள் (அப்பர் தேவார நுட்பங்கள் - பகுதி 2):

நம் அப்பர் சுவாமிகள் சுமார் 20 முதல் 30 திருப்பாடல்களில் கந்தப் பெருமானைப் பல்வேறு திருநாமங்களால் குறிப்பிட்டு மகிழ்ந்துள்ளார். இவற்றுள் 'நம் கடம்பனை', 'நம் செந்தில் மேய' என்று நெருக்கம் கலந்த உரிமையோடு குறிக்கும் சொற்பிரயோகங்கள் மிக இனிமையானவை, நெகிழ்விக்கக் கூடியவை. இனி இப்பதிவில் கந்தவேளைக் குறிக்கும், இவ்விதமான சிறப்புச் சொல்லாடல்களோடு கூடிய 10 திருப்பாடல்களைச் சிந்தித்து மகிழ்வோம், 

(1) ('வடியேறு திரிசூலம்' என்று துவங்கும் திருப்பூவணம் தேவாரம்: திருப்பாடல் 4)
பன்னிரண்டு கையுடைய பிள்ளை தோன்றும்

(2) ('வேழம்பத்(து) ஐவர்' என்று துவங்கும் திருக்கோழம்பம் தேவாரம் - திருப்பாடல் 10)
சமர சூரபன்மாவைத் தடிந்த வேற்குமரன் தாதை

(3) ('மாசிலொள்' என்று துவங்கும் திருவதிகை தேவாரம் - திருப்பாடல் 5)
விரி நீர்பரவைச் சூரட்ட வேலவன் தாதை

(4) ('மறையணி நாவினானை' என்று துவங்கும் திருப்பெருவேளூர் தேவாரம் - திருப்பாடல் 3)
குறவிதோள் மணந்த செல்வக் குமரவேள் தாதை 

(5) ('மின்னும் சடை'  என்று துவங்கும் திருஅரிசிற்கரைப்புத்தூர் தேவாரம் - திருப்பாடல் 6)
வள்ளி முலைதோய் குமரன் தாதை

(6) ('தூண்டு சுடரனைய' என்று துவங்கும் திருமறைக்காடு தேவாரம் - திருப்பாடல் 4)
நம் செந்தில் மேய வள்ளி மணாளற்குத் தாதை 

(7) ('ஒன்றுகொலாம்' என்று துவங்கும் பொதுப் பதிகம் - திருப்பாடல் 6)
ஆறுகொலாம் அவர்தம் மகனார் முகம்

(8 ) ('அல்லிமலர்' என்று துவங்கும் திருஇன்னம்பர் தேவாரம் - திருப்பாடல் 2)
'கோழிக் கொடியோன்தன் தாதை போலும்'

(9) ('அரவணையான்' என்று துவங்கும் திருவதிகை தேவாரம் - திருப்பாடல் 1)
சரவணத்தான் கைதொழுது சாரும்அடி

(10) ('தளரும் கோளரவத்தோடு' என்று துவங்கும் கடம்பூர் தேவாரம் - திருப்பாடல் 9)
நம் கடம்பனைப் பெற்றவள் பங்கினன்

ரிக் வேதத்தைப் போற்றும் நாவுக்கரசு சுவாமிகள் (அப்பர் தேவார நுட்பங்கள் - பகுதி 3)

சைவம் உள்ளிட்ட அறுவகைச் சமயங்களுக்கும் அடிப்படையாகவும், அடிநாதமாகவும் விளங்குவது (சிவபரம்பொருள் அருளியுள்ள) ரிக்; யஜுர்; சாம அதர்வணமாகிய நால்வேதங்களே. 'வடமொழியில் அமைந்துள்ள இந்நான்கு வேதங்களுக்கும் சைவ சமயத்திற்கும் தொடர்பில்லை' என்பது போன்ற தொடர்ப் பொய்ப் பிரச்சாரங்கள் பல்கிப் பெருகி வரும் இக்கால கட்டத்தில், தக்க அகச் சான்றுகளோடு மீண்டும் மீண்டும் இது குறித்துத் தெளிவுறுத்த வேண்டியது அவசியமாகின்றது. 

'ரிக்' எனும் வடமொழிச் சொல்லை 'ருக்' என்று தமிழாக்கியும், (ராமனை 'இராமன்' என்று எழுதுமாற் போல), ருக் வேதத்தை 'இருக்கு வேதம்' எனும் சொல்லாடலோடு நம் அருளாளர்கள் தத்தமது பாடல்களில் கையாண்டு வந்துள்ளனர்.  

இனி இப்பதிவில் நம் அப்பர் சுவாமிகள் ரிக் வேதத்தினைச் சிறப்பித்துப் போற்றும் திருப்பதிகப் பாடல்களை அறிந்துணர்ந்து போலிப் பிரச்சாரங்களைப் புறந்தள்ளுவோம், 

(1) ('மறையும் ஓதுவர்' என்று துவங்கும் 'திருப்பேரெயில்' தேவாரம் - திருப்பாடல் 6)
திருக்கு வார்குழல் செல்வன சேவடி
இருக்கு வாய்மொழியால் தனைஏத்துவார்
சுருக்குவார் துயர் தோற்றங்கள் ஆற்றறப்
பெருக்குவார்அவர் பேரெயிலாளரே
-
(குறிப்பு: பேரெயிலில் எழுந்தருளியுள்ள சிவமூர்த்தி 'ரிக் வேத மந்திரங்களால் தொழுவோரின்' துயர்களைப் போக்கியருள்வார் என்று அப்பர் சுவாமிகள் பதிவு செய்கின்றார்)

(2) ('சிட்டனைச் சிவனை' என்று துவங்கும் 'திருப்பாண்டிக்கொடுமுடி' தேவாரம் - திருப்பாடல் 5)
நெருக்கி அம்முடி நின்றிசை வானவர்
இருக்கொடும் பணிந்தேத்த இருந்தவன்
திருக்கொடும்முடி என்றலும் தீவினைக்
கருக்கெடும்இது கைகண்ட யோகமே
-
(குறிப்பு: 'விண்ணுறைத் தேவர்கள் கூட்டமாக நின்று ரிக் வேத மந்திரங்களால் பணிந்தேத்தும் தன்மையில், திருபாண்டிக்கொடுமுடி இறைவர் எழுந்தருளி இருக்கின்றார்' என்று போற்றுகின்றார் நம் அப்பர் பெருமானார்)

(3) ('கடலகம் ஏழினோடும்' என்று துவங்கும் 'திருஆப்பாடி' தேவாரம் - திருப்பாடல் 3) 
எண்ணுடை இருக்குமாகி இருக்கினுள் பொருளுமாகிப்
பண்ணொடு பாடல் தன்னைப் பரவுவார் பாங்கராகிக்
கண்ணொரு நெற்றியாகிக் கருதுவார் கருதலாகாப்
பெண்ணொரு பாகமாகிப் பேணும் ஆப்பாடியாரே
-
(குறிப்பு: 'ரிக் வேத சுவரூபமாகவும் அவ்வேதம் சுட்டும் முதற்பொருளாகவும் திருஆப்பாடி இறைவர் விளங்குகின்றார்' என்று சிறப்பிக்கின்றார் நம் தாண்டக வேந்தர்)

(4) ('தொண்டனேன்' என்று துவங்கும் பொதுப் பதிகம் - திருப்பாடல் 1)
தொண்டனேன் பட்டதென்னே தூயகாவிரியி(ல்) நன்னீர்
கொண்(டு) இருக்கோதி ஆட்டிக் குங்குமக் குழம்பு சாத்தி
இண்டை கொண்டேற நோக்கி ஈசனை எம்பிரானைக்
கண்டனைக் கண்டிராதே காலத்தைக் கழித்தவாறே!!!
-
(குறிப்பு: 'ரிக் வேத மந்திரங்களால் போற்றியவாறு சிவலிங்கத் திருமேனிக்கு தீர்த்த நீராட்டாமல் காலத்தைப் போக்கினேனே' என்று வருந்திப் பாடுகின்றார் நம் நாவுக்கரசு சுவாமிகள்)

(5) ('பொருப்பள்ளி' என்று துவங்கும் பொதுப் பதிகம் - திருப்பாடல் 5)
பெருக்காறு சடைக்கணிந்த பெருமான் சேரும்
    பெருங்கோயில் எழுபதினோ(டு) எட்டும் மற்றும் 
கரக்கோயில் கடிபொழில்சூழ் ஞாழற் கோயில்
    கருப்பறியல் பொருப்பனைய கொகுடிக் கோயில்
இருக்கோதி மறையவர்கள் வழிபட்டேத்தும்
    இளங்கோயில் மணிக்கோயில் ஆலக்கோயில்
திருக்கோயில் சிவனுறையும் கோயில் சூழ்ந்து
    தாழ்ந்திறைஞ்சத் தீவினைகள் தீரும் அன்றே!!!
-
(குறிப்பு: சிவபெருமான் எழுந்தருளியுள்ள கோயில் வகைகளைப் பட்டியலிடும் நம் அப்பர் சுவாமிகள், 'மறையவர்கள் ரிக் வேத மந்திரங்களை ஓதி வழிபடும் இடம் இளங்கோயில்' என்று இத்திருப்பாடலில் பதிவு செய்கின்றார்)

(6) ('வேத நாயகன்' என்று துவங்கும் பொதுப் பதிகம் - திருப்பாடல் 8 )
அருக்கன் பாதம் வணங்குவர் அந்தியில்
அருக்கனாவான் அரனுரு வல்லனோ
இருக்கு நான்மறை ஈசனையே தொழும்
கருத்தினை நினையார் கல் மனவரே!!!
-
(குறிப்பு: இத்திருப்பாடலில் 'ரிக் முதலான நான்மறைகள்' என்று ஐயத்திற்குச் சிறிதும் இடமின்றி சைவ சமய அன்பர்களுக்கு நம் அப்பர் அடிகள் தெளிவுறுத்துகின்றார்) 

ஷேத்திரங்களின் திருப்பெயர்களைப் பாராயணம் புரிவதால் விளையும் நற்பலன்கள் (அப்பர் தேவார நுட்பங்கள் - பகுதி 4)

'பிதற்றாய் பிறைசூடி தன் பேரிடமே' என்று ஷேத்திரக் கோவையில் ஞானசம்பந்த மூர்த்தி அறிவுறுத்துகின்றார். அம்முறையில் நம் அப்பர் சுவாமிகளும் சிவத்தலங்களின் திருப்பெயர்களைப் போற்றுவதன் மேன்மையையும், அதனால் விளையும் அளவிலா நற்பலன்களையும் பின்வரும் அற்புத அற்புத திருப்பாடல் வரிகளால் பட்டியலிடுகின்றார், 

(1) ('நேர்ந்தொருத்தி ஒருபாகத்(து)' என்று துவங்கும் பொதுத் திருப்பதிகத்தில் இடம்பெறும் முதல் 9 திருப்பாடல்களின் இறுதி இரு வரிகள்)

பூந்துருத்தி பூந்துருத்தி என்பீராகில்
    பொல்லாப் புலால் துருத்தி போக்கலாமே

நெய்த்தானம் நெய்த்தானம் என்பீராகில்
நிலாவாப் புலால்தானம் நீக்கலாமே

ஐயாறே ஐயாறே என்பீராகில்
அல்லல் தீர்ந்தமருலகம் ஆளலாமே.

பழனம் பழனமே என்பீராகில்
பயின்றெழுந்த பழவினைநோய் பாற்றலாமே.

சோற்றுத்துறை சோற்றுத்துறை என்பீராகில்
துயர்நீங்கித் தூநெறிக்கண் சேரலாமே

வலஞ்சுழியே வலஞ்சுழியே என்பீராகில்
வல்வினைகள் தீர்ந்து வான்ஆளலாமே

கண்டியூர் கண்டியூர் என்பீராகில் 
கடுகநும் வல்வினையைக் கழற்றலாமே

குடமூக்கே குடமூக்கே என்பீராகில் 
கொடுவினைகள் தீர்ந்தரனைக் குறுகலாமே

வெண்காடே வெண்காடே என்பீராகில்
வீடாத வல்வினை நோய் வீட்டலாமே

(2) ('மட்டுவார் குழலாளொடு' என்று துவங்கும் திருச்சிராப்பள்ளி தேவாரம் - திருப்பாடல் 3)
அரிச்சிராப் பகல் ஐவரால் ஆட்டுண்டு
சுரிச்சிராது நெஞ்சே ஒன்று சொல்லக்கேள்
திருச்சிராப்பள்ளி என்றலும் தீவினை
நரிச்சிராது நடக்கும் நடக்குமே
-
(குறிப்பு: 'திருச்சிராப்பள்ளி' எனும் திருப்பெயரினைக் காதலோடு போற்றுவோரின் தீவினைகள் (அத்தலத்துறை இறைவரான தாயுமான சுவாமியின் பேரருளால்) வேரோடு அழிந்துபடும். இது சத்தியம்; சத்தியமே என்று அறுதியிட்டுக் கூறுகின்றார்.

இராவணன் சிவ பக்தனா? (அப்பர் தேவார நுட்பங்கள் - பகுதி 5)

முதற்கண் இராவணன் பரம்பொருளான சிவபெருமானைக் குறித்து தவம் மேற்கொண்டு வரங்களைப் பெற்றவன் அல்லன், படைப்புக் கடவுளான பிரமனை வேண்டித் தவமிருந்து வரங்களைப் பெற்றவன். இதனைப் பின்வரும் திருப்பாடலில் 'அயன் அருளினில்' என்று ஞானசம்பந்த மூர்த்தி குறிக்கின்றார்,
-
(சம்பந்தர் தேவாரம் - 'புவம்வளி' என்று துவங்கும் திருச்சிவபுரப் பதிகம் - திருப்பாடல் 8 )
அசைவுறு தவ முயல்வினில் அயன் அருளினில் வருவலி கொடுசிவன்
இசை கயிலையை எழுதருவகை இருபது கரம்அவை நிறுவிய 
நிசிசரன்.. 

இனி இப்பதிவில் நம் அப்பர் சுவாமிகள் இராவணன் தொடர்பாகப் பதிவு செய்துள்ள முக்கியக் குறிப்புகளையும் உணர்ந்து தெளிவுறுவோம், 

(1)

இராவணன் புஷ்பக விமானத்தில் விண்ணில் செல்லுகையில், திருக்கயிலை மலை எதிர்ப்பட, தேர் தடைப்பட்டு நிற்கின்றது. 'ஆதிப்பரம்பொருள் எழுந்தருளியுள்ள திருமலை' என்று ஒருசிறிதும் அச்சமின்றி, 'நான் முன்னேறிச் செல்ல இம்மலை தடை செய்வதோ?' என்று கடும் ஆணவத்துடன் அதனைப் பெயர்க்க முனைகின்றான். இதுவோ சிவபக்தியின் குறியீடு? 

'பெற்ற வரபலத்தினால், அறிவில்லாமல் திருக்கயிலை மலையைப் பெயர்க்க முயன்றான் இராவணன்' என்று அப்பர் சுவாமிகள் பின்வரும் திருப்பாடலில் சாடுகின்றார்,
-
('பன்னிய செந்தமிழ்' என்று துவங்கும் திருஎறும்பியூர் தேவாரம் - திருப்பாடல் 10)
அருந்தவத்தின் பெருவலியால் அறிவதின்றி
அடலரக்கன் தடவரையை எடுத்தான் 

(2)

'இறைவரும் இறைவியும் எழுந்தருளியுள்ள திருமலை' என்று ஒருசிறிதும் மதியாது 'அம்மலையைப் பெயர்க்க முயன்றான் இராவணன்' என்று பின்வரும் திருப்பாடலில் அப்பர் அடிகள் பதிவு செய்கின்றார்,
-
('வடிவுடை மாமலை' என்று துவங்கும் திருநாகைக்காரோண தேவாரம் - திருப்பாடல் 9)
கருந்தடம் கண்ணியும் தானும் கடல்நாகைக் காரோணத்தான்
இருந்த திருமலை என்றிறைஞ்சா(து) அன்றெடுக்கலுற்றான்

(3)

'எண்தோளானே எம்பெருமான் என்றேத்தா இராவணன்' என்று 'இராவணன் இந்நிகழ்வு வரையில் சிவபெருமானிடத்து பக்தி கொண்டிருந்தவன் அல்லன்' என்று அப்பர் சுவாமிகள் தெளிவுறுத்துகின்றார்,
-
('தோற்றினான் எயிறு கவ்வி' என்று துவங்கும் திருநெய்த்தான தேவாரம் - திருப்பாடல் 10)
...எண்தோளானே
எம்பெருமான் என்றேத்தா இலங்கைக் கோனை
நெரித்தானை நெய்த்தானம் மேவினானை

(4)

'இராவணன் நேர்மையற்றவன்; நன்மை அறியாதவன்' என்று பின்வரும் திருப்பாடல்களில் அப்பர் சுவாமிகள் பதிவு செய்கின்றார்,
-
('தோற்றினால் எயிறு கவ்வி' என்று துவங்கும் திருஅவளிவணல்லூர் தேவாரம்)
நிலைவலம் வல்லன் அல்லன் நேர்மையை நினைய மாட்டான் (திருப்பாடல் 4)
நன்மை தான் அறிய மாட்டா(ன்) நடுவிலா அரக்கர் கோமான் (திருப்பாடல் 6) 

(5)

('தேரையு(ம்) மேல் கடாவி' என்று துவங்கும் திருமறைக்காடு தேவாரம்)
வலியன்என்று பொத்திவாய் தீமை செய்த பொருவலி அரக்கர்கோன் (திருப்பாடல் 7)
மிக்கமா மதிகள் கெட்டு வீரமும் இழந்தவாறே (திருப்பாடல் 8 )

(இறுதிக் குறிப்பு)
பின்னாளில் இராவணன் கைக்கொண்ட சிவபக்தியானது '1000 வருடங்கள் திருக்கயிலை மலைக்கடியில் சிக்குண்ட அச்சத்தின் வெளிப்பாடே', அன்றி அது சிவபெருமானிடத்து உள்ள அன்பினால் இயல்பாகத் தோன்றிய பக்தி அன்று. வலி பொறுக்க இயலாமல்; இசைபாடி மன்னிப்பு வேண்டிப் பாடியதால், கருணைக் கடலான சிவமூர்த்தி திருவுள்ளம் கனிந்து (அவனுடைய இக்குற்றத்தை மட்டும் மன்னித்து) நாளும் வாளும் தந்தருள் புரிகின்றார்.

அம்பிகையின் ஊடல் போக்க சிவபெருமான் செய்வது என்ன? (அப்பர் தேவார நுட்பங்கள் - பகுதி 6)

உலகியலில் ஒவ்வொருவரும், காதலி அல்லது மனைவி கொண்டிருக்கும் ஊடலைப் போக்க ஓரோர் வகையினைக் கைக்கொள்வர். அம்முறையில் நம் உமையன்னை பரம்பொருளான தன் மணாளரோடு ஊடல் கொள்ளும் சமயங்களில், இறைவர் அதனை எவ்விதம் போக்கியருள்வார்? இதற்கான விடையை நம் அப்பர் சுவாமிகளின் பின்வரும் திருப்பாடலில் பகர்கின்றார்.
-
முக்கண் முதல்வர் கங்கையெனும் நங்கையைத் தன் திருமுடியில் சூட்டிய காரணத்தினால் உலகீன்ற உமையவள் வாட்டமுற்று ஊடல் கொள்கின்றனளாம். உடன் நம் இறைவர் (நால்வேதங்களுள் ஒன்றான) சாமவேதத்தினை இதமாக; இனிமையாகப் பாடிப் பின்னர் அவ்விசையின் தன்மைக்கேற்பத் திருநடமும் புரிந்தருள, நம் அம்மை அக்கணமே ஊடல் நீங்கியவளாய் திருவுள்ளம் மகிழ்கின்றாளாம். 
-
('மடக்கினார் புலியின்' - திருவதிகை தேவாரம் - திருப்பாடல் 2)
சூடினார் கங்கையாளைச் சூடிய துழனி கேட்டங்(கு)
ஊடினா(ள்) நங்கையாளும், ஊடலை ஒழிக்க வேண்டிப்
பாடினார் சாம வேதம் பாடிய பாணியாலே
ஆடினார் கெடிலவேலி அதிகை வீரட்டனாரே
*
இனி இப்பதிவில் அம்பிகை காணுமாறு ஐயன் ஆடிய திருக்கோலத்தினை விளக்கும் சில அற்புதத் திருப்பாடல்களையும் சிந்தித்து மகிழ்வோம்,
-

(1)

'அஞ்சொலாள் காண நின்று அழகநீ ஆடுமாறே' என்று இத்திருப்பாடலில் சுவாமிகள் போற்றுகின்றார்,
-
('பத்தனாய்ப் பாட மாட்டேன்' - தில்லை தேவாரம் - திருப்பாடல் 9)
நெஞ்சினைத் தூய்மை செய்து நினைக்குமா நினைப்பியாதே
வஞ்சமே செய்தியாலோ வானவர் தலைவனேநீ
மஞ்சடை சோலைத் தில்லை மல்கு சிற்றம்பலத்தே
அஞ்சொலாள் காண நின்று அழகநீ ஆடுமாறே

(2)

'குயிலாரும் மென்மொழியாள் குளிர்ந்து நோக்கக் கூத்தாடவல்ல குழகர் போலும்' என்று இத்திருப்பாடலில் சுவாமிகள் பணிந்தேத்துகின்றார்,
-
('மானேறு கரமுடைய' - திருவீழிமிழலை தேவாரம் - திருப்பாடல் 11)
கயிலாய மலையெடுத்தான் கதறி வீழக்
கால்விரலால் அடர்த்தருளிச் செய்தார் போலும்
குயிலாரும் மென்மொழியாள் குளிர்ந்து நோக்கக் 
கூத்தாடவல்ல குழகர் போலும்
வெயிலாய சோதி விளக்கானார் போலும்
வியன்வீழி மிழலைஅமர் விகிர்தர் போலும்
அயிலாரும் மூவிலைவேல் படையார் போலும்
அடியேனை ஆளுடைய அடிகள் தாமே

(3)

'இவர்ஆடுமாறும் இவள் காணுமாறும் இதுதான் இவர்க்கொர் இயல்பே' என்று இத்திருப்பாடலில் குறிக்கின்றார்,
-
('சிவனெனும் ஓசை' - பொதுப் பதிகம் - திருப்பாடல் 3)
தேய்பொடி வெள்ளை பூசி அதன்மேலொர் திங்கள் திலகம் பதித்த நுதலர்
காய்கதிர் வேலை நீல ஒளிமா மிடற்றர்; கரிகாடர்; காலொர் கழலர்
வேயுடனாடு தோளியவள் விம்ம வெய்ய மழுவீசி வேழஉரி !போர்த்
தேஇவர்ஆடுமாறும் இவள் காணுமாறும் இதுதான் இவர்க்கொர் இயல்பே

(4)

இத்திருப்பாடலில் 'காம்பாடு தோள்உமையாள் காண நட்டம்  கலந்தாடல் புரிந்தவன் காண்' என்று '(மூங்கிலனைய திருத்தோள்களை உடைய) உமையன்னை காண இறைவர் திருநடம் புரியும்' மாண்பினைச் சுட்டுகின்றார் சுவாமிகள், 
-
('புரிந்தமரர் தொழுதேத்தும்' - திருப்புத்தூர் தேவாரம் - திருப்பாடல் 6)
காம்பாடு தோள்உமையாள் காண நட்டம் 
கலந்தாடல் புரிந்தவன்காண்; கையில் வெய்ய
பாம்பாடப் படுதலையில் பலிகொள்வோன் காண்
பவளத்தின் பருவரைபோல் படிவத்தான் காண்
தாம்பாடு சினவிடையே பகடாக் கொண்ட
சங்கரன் காண்; பொங்கரவக் கச்சையோன் காண்
சேம்பாடு வயல்புடைசூழ் திருப்புத்தூரில்
திருத்தளியான் காண் அவனென் சிந்தையானே

சிவபெருமானை நம் வாழ்நாளிலேயே நேரில் தரிசிக்க எளியதொரு வழிமுறை (அப்பர் தேவார நுட்பங்கள் - பகுதி 7)

தனிப்பெரும் தெய்வமான சிவபரம்பொருளை நேரிலேயே தரிசிக்க, யாவராலும் கைக்கொள்ளக் கூடிய ஆச்சரியமான எளிய வழிமுறை ஒன்றினை நம் அப்பர் சுவாமிகள் பின்வரும் திருப்பாடலில் வெளிப்படுத்துகின்றார்.

(1)
திருப்பாடலின் இறுதி இரு வரிகளை முதற்கண் சிந்திப்போம், சிவமூர்த்தியின் திருநாமத்தினை ஓதியவாறே அப்பெருமானைப் பலகாலம் தொடர்ந்து 'ஐயனே, என்றேனும் என் முன்னர் தோன்றி அருள மாட்டாயோ?' என்று உளமுருகி உறுதி மாறாது அழைத்துக் கொண்டே இருந்தால், 'இவன் நம்மைப் பலகாலம் இடைவிடாது அழைக்கின்றானே' என்று அக்கருணா மூர்த்தி திருவுள்ளம் மிக இரங்கி, நம்முன் வெளிப்பட்டுத் தோன்றுவாராம். 

('வெள்ளிக் குழைத்துணி போலும்' என்று துவங்கும் பொதுத் திருப்பதிகம் - திருப்பாடல் 9)
சிவனெனு(ம்) நாமம் தனக்கே உடைய செம்மேனி எம்மான்
அவனெனை ஆட்கொண்(டு) அளித்திடுமாகில், அவன்தனை யான்
பவனெனு(ம்) நாமம் பிடித்துத் திரிந்து பன்னாள் அழைத்தால்,
இவன்எனைப் பன்னாள் அழைப்பொழியான் என்(று) எதிர்ப்படுமே

'நாமம் பிடித்துத் திரிந்து' எனும் சுவாமிகளின் திருவாக்கிற்கு 'திருஐந்தெழுத்தான ஸ்ரீபஞ்சாட்சர ஜபம் மற்றும் திருமுறைப் பாராயணம்' என்று பொருள் கொள்வது சிறப்பு. 

அருமையான நெகிழ்விக்கும் வழிமுறை! இதற்குப் பிரமாணம் கூறுவது திருத்தொண்டின் தனியரசரான நம் அப்பர் சுவாமிகளன்றோ!! இன்றே அதற்கான முயற்சியினைத் துவங்குவோமா?

4ஆம் திருமுறையில் தட்சிணாமூர்த்தியின் திருநாமம் (அப்பர் தேவார நுட்பங்கள் - பகுதி 8 )

பிரம்ம புத்திரர்களான சனகர்; சனாதனர்; சனற்குமாரர்; சனந்தனர் ஆகியோர் பொதுவில் சனகாதியர் என்று குறிக்கப் பெறுவர். இந்நால்வர்க்கும் சிவபரம்பொருள் தென்திசை நோக்கி எழுந்தருளி இருந்து, சின்முத்திரையுடன் ரிக்; யஜுர்; சாம; அதர்வண வேத சாரங்களை உபதேசித்து அருளிய புராதன நிகழ்வினை நம் நாவுக்கரசு சுவாமிகள் பல்வேறு திருப்பாடல்களில் பதிவு செய்து போற்றியுள்ளார். 

(1)
(திருக்கச்சி ஏகம்ப தேவாரம்: 'கரவாடும் வன்னெஞ்சர்க்(கு) அரியானை' - திருப்பாடல் 4)
விரித்தானை நால்வர்க்கு வெவ்வேறு வேதங்கள்

(2)
(திருமால்பேறு தேவாரம்: 'பொருமாற்றின்படை' - திருப்பாடல் 2)
ஆலத்தார் நிழலில்அற நால்வர்க்குக்
கோலத்தால் உரை செய்தவன்

(3)
(திருநல்லூர் தேவாரம்: 'நினைந்துருகும் அடியாரை' - திருப்பாடல் 4)
சொல்லருளி அறம் நால்வர்க்(கு) அறிய வைத்தார்

இவ்வுபதேச நிகழ்வினை குறிக்கும் திருப்பாடல் வரிகள் யாவுமே, இறைவரின் திருநாமமின்றிப் பொதுவான தன்மையிலேயே அமைக்கப் பெற்றிருக்கும். எனினும் அரிதினும் அரிதாகப் பின்வரும் திருவதிகை தேவாரத் திருப்பாடலில் 'தக்கணா போற்றி' என்று நம் சுவாமிகள் அருளிச் செய்துள்ளது எண்ணி இன்புறத் தக்கதொரு குறிப்பாகும்,  

(திருவதிகை தேவாரம்: 'எல்லாம் சிவனென்ன நின்றாய் போற்றி' - திருப்பாடல் 10) 
முக்கணா போற்றி முதல்வா போற்றி
    முருகவேள் தன்னைப் பயந்தாய் போற்றி
தக்கணா போற்றி தருமா போற்றி
    தத்துவனே போற்றிஎன் தாதாய் போற்றி
தொக்கணா என்றிருவர் தோள்கை கூப்பத்
    துளங்கா(து) எரிசுடராய் நின்றாய் போற்றி
எக்கண்ணும் கண்ணிலேன் எந்தாய் போற்றி
    எறிகெடில வீரட்டத்(து) ஈசா போற்றி

பிட்டுக்கு மண் சுமந்த பரம்பொருள் (அப்பர் தேவார நுட்பங்கள் - பகுதி 9)

'வந்தி' எனும் மூதாட்டிக்கு அருளும் பொருட்டு சோமசுந்தரப் பெருங்கடவுள் 'பிட்டுக்கு மண் சுமந்து சென்ற' அற்புதத் திருவிளையாடலை நம் அப்பர் பெருமானார் 'வைகைத் திருக்கோட்டில் நின்றதோர் திறமும் தோன்றும்' என்று பின்வரும் திருப்பூவணத் திருப்பாடலில் போற்றியுள்ளார். மணிவாசகப் பெருந்தகையார் அப்பர் சுவாமிகளின் அவதாரக் காலத்திற்கு மிக முற்பட்டவர் என்பதற்கு இத்திருப்பாடல் வரிகள் மற்றுமோர் அகச் சான்று.

(திருப்பூவண தேவாரம்: 'வடியேறு திரிசூலம் தோன்றும் தோன்றும்' - திருப்பாடல் 9)
அருப்போட்டு முலைமடவாள் பாகம் தோன்றும்
    அணிகிளரும் உருமென்ன அடர்க்கும் கேழல்
மருப்போட்டு மணிவயிரக் கோவை தோன்றும்
    மணமலிந்த நடம்தோன்றும்; மணியார் வைகைத்
திருக்கோட்டில் நின்றதோர் திறமும் தோன்றும் 
    செக்கர்வான் ஒளிமிக்குத் திகழ்ந்த சோதிப்
பொருப்போட்டி நின்றதிண் புயமும் தோன்றும்
    பொழில்திகழும் பூவணத்தெம் புனிதனார்க்கே

நரி பரியாக்கிய படலம் (அப்பர் தேவார நுட்பங்கள்- பகுதி 10)

சோமசுந்தரக் கடவுள் மணிவாசகப் பெருமானின் பொருட்டு நரிகளைப் பரிகளாக்கி நிகழ்த்தியருளிய அற்புதத் திருவிளையாடலை நம் அப்பர் சுவாமிகள் பின்வரும் இரு திருப்பாடல்களில் பதிவு செய்து போற்றியுள்ளார், 

(1)
('கரைந்து கை தொழுவாரையும்' - திருவீழிமிழலை தேவாரம் - திருப்பாடல் 8)
எரியினார் இறையார் இடுகாட்டிடை
நரியினார் பரியா மகிழ்கின்றதோர்
பெரியனார் தம் பிறப்பொடு சாதலை
விரியினார் தொழும் வீழி மிழலையே

(2)
('பாடிளம் பூதத்தினானும்' - திருவாரூர் தேவாரம் - திருப்பாடல் 2)
நரியைக் குதிரை செய்வானும்; நரகரைத் தேவு செய்வானும்
விரதம் கொண்டாட வல்லானும்; விச்சின்றி நாறு செய்வானும்
முரசதிர்ந்(து) ஆனை முன்னோட முன்பணிந்(து) அன்பர்களேத்த
அரவரைச் சாத்தி நின்றானும் ஆரூர் அமர்ந்த அம்மானே

தருமிக்குப் பொற்கிழி அளித்த படலம் (அப்பர் தேவார நுட்பங்கள் - பகுதி 11)

திருஆலவாய் எனும் மதுரை ஷேத்திரத்தில், எளிய ஆதிசைவ இளைஞரான தருமி எனும் அடியவருக்குப்  பாண்டிய வேந்தன் பரிசறிவித்த பொற்கிழியை உரித்தாக்கும் பொருட்டு, சோமசுந்தரப் பெருங்கடவுள் புரிந்தருளிய அற்புதத் திருவிளையாடலை நம் அப்பர் சுவாமிகள் பின்வரும் திருப்பாடலில் பதிவு செய்து போற்றுகின்றார்,

('புரிந்தமரர் தொழுதேத்தும்' என்று துவங்கும் திருப்புத்தூர் தேவாரம் - திருப்பாடல் 3)
மின்காட்டும் கொடி மருங்குல் உமையாட்கென்றும்
விருப்பவன்காண்; பொருப்பு வலிச்சிலைக் கையோன் காண்
நன்பாட்டுப் புலவனாய்ச் சங்கமேறி
நற்கனகக் கிழி தருமிக்(கு) அருளினோன் காண்

பொன்காட்டக் கடிக்கொன்றை மருங்கே நின்ற
புனக்காந்தள் கைகாட்டக் கண்டு வண்டு
தென்காட்டும் செழும்புறவின் திருப்புத்தூரில்
திருத்தளியான் காண்; அவனென் சிந்தையானே!!!

நாவுக்கரசு சுவாமிகள் தேவாரத்தில் திருஞானசம்பந்தர் பற்றிய அற்புதக் குறிப்புகள் (அப்பர் தேவார நுட்பங்கள் - பகுதி 12)

(1)
திருவாவடுதுறை தலத்தில் சம்பந்த மூர்த்தி எழுந்தருளியிருந்த சமயத்தில், தந்தையாரான 'சிவபாத இருதயர்' அங்கு வருகை புரிந்து, 'சீகாழியில் சிவவேள்வி புரிதற்குப் பொருட்தேவை உள்ளதென்று' புகல்கின்றார். சிவஞானச் செல்வர் ஆவடுதுறை ஆலயத்துள் இறைவரின் திருமுன்பு சென்று, பொன் வேண்டும் குறிப்புடன் 'இடரினும் தளரினும்' எனும் பாமாலையால் போற்றி செய்து விண்ணப்பிக்கின்றார். உடன் சிவபூதகணமொன்று  அங்கு தோன்றி, அங்குள்ள பலிபீடத்தில் 1000 பொன் அடங்கிய முடிப்பினை வைத்து, 'இது இறைவர் உமக்கருள் செய்தது' என்றுரைத்து மறைகின்றது. 

நம் அப்பர் சுவாமிகள் இவ்வரிய நிகழ்வினை 'கழுமல ஊரர்க்(கு) அம்பொன் ஆயிரம் கொடுப்பர் போலும் ஆவடுதுறையனாரே' என்று பதிவு செய்து போற்றுகின்றார்,

(திருவாவடுதுறை தேவாரம் - திருப்பாடல் 1)
மாயிரு ஞாலமெல்லா(ம்) மலரடி வணங்கும் போலும்
பாயிரும் கங்கையாளைப் படர்சடை வைப்பர் போலும்
காயிரும் பொழில்கள் சூழ்ந்த கழுமல ஊரர்க்(கு) அம்பொன்
ஆயிரம் கொடுப்பர் போலும் ஆவடுதுறையனாரே

(2)
மற்றொரு சமயம் அப்பர் சுவாமிகள் ஞானசம்பந்த மூர்த்தியுடன் திருமறைக்காட்டிற்கு எழுந்தருளிச் செல்லுகையில், அங்கு பன்னெடுங்காலமாய்த் திறவாதிருந்த ஆலயத்தின் பிரதான வாயிற் கதவினைச் சுவாமிகள் திறக்கப் பாடுகின்றார். வழிபாடு நிறைவுற்ற பின்னர், சம்பந்தச் செல்வர், நெடுநாள் திறவாதிருந்த தன்மை சீர்பெறும் பொருட்டு மீண்டுமொரு முறை அடைப்பிக்கப் பாடுகின்றார். 

அன்றிரவு துயில் கொள்ளுகையில், திருவாய்மூர் மேவும் தேவதேவர் சுவாமிகளின் கனவில் தோன்றி, 'நம் வாய்மூருக்கு வருக' என்றருள் புரிகின்றார். அந்நள்ளிரவு வேளையில் சுவாமிகள் பெரும் ஆர்வத்துடன் வாய்மூருக்கு விரைந்து செல்கின்றார். வழிதோறும் வாய்மூர் முதல்வர் ஆங்காங்கே தோன்றுவதும் மறைவதுமாய்த் திருவிளையாடல் புரிந்தருளி, அங்குள்ள ஆலயத்துள் புகுந்து மறைகின்றார். 

இந்நிகழ்வினைப் பின்னர் அறியப் பெறும் சம்பந்தப் பெருமானார் 'இவ்வேளையில் சுவாமிகள் சென்றிருக்கும் காரணம் தான் யாதோ?' என்றெண்ணியவாறு அவ்வழியிலேயே தாமும் பின்தொடர்ந்து செல்கின்றார். அங்கு சிவதரிசனம் கிட்டாது பரிதவித்து நின்றிருந்த சுவாமிகள் 'ஐயனே, உன் திருவுளம் அறியாது; காலமற்ற காலத்தில் ஆலயக் கதவினைத் திறப்பித்த அடியேனுக்கு நீர் உம்மை மறைத்தருளியது முறையே! எனினும் அடியேனின் அத்தவறினை சீர்செய்யும் பொருட்டு, மணிக்கதவை முறையாக அடைப்பித்த உம்முடைய சீகாழிச் செல்வர் இங்கு எழுந்தருளி வந்துள்ளார். இனியும் நீர் மறைந்தருள இயலுமோ?' என்று நயம்படப் பாடுகின்றார், 

(திருவாய்மூர் தேவாரம்: 'எங்கேயென்னை' - திருப்பாடல் 8 )
திறக்கப் பாடிய என்னினும் செந்தமிழ்
உறைப்புப் பாடி அடைப்பித்தாரும் நின்றார்
மறைக்க வல்லரோ தம்மைத் திருவாய்மூர்ப்
பிறைக்கொள் செஞ்சடையார் இவர் பித்தரே

மகா சிவராத்திரி வழிபாட்டு முறை குறித்த சில சிந்தனைகள்:

மாசி மாதத்தில், தேய்பிறைக் காலமான கிருஷ்ண பட்ச சதுர்த்தசித் திதியின் இரவுப் பொழுதே 'மகா சிவராத்திரி' என்று போற்றப் பெற்று பெறுகின்றது. தனிப்பெரும் தெய்வமான சிவபெருமானின் திருவுள்ளத்துக்கு மிகவும் உகந்த இத்திருநாளன்று நிகழ்த்தப்படும் வழிபாடுகள் 'எண்ணில் கோடி பிறவிகளின் வல்வினைகளை வேரறுக்க வல்லது' என்று புராணங்கள் அறுதியிடுகின்றன.

மாலை 6 மணி துவங்கி, மறு நாள் காலை 6 மணி வரையிலான நான்கு (3 மணி நேர) யாமங்களே சிவராத்திரி வழிபாட்டுக்குரிய காலங்கள். ஆதலின் விரத நாளன்று (அதாவது சனிக்கிழமை) காலைப் பொழுது முதல் மாலை 6 மணி வரையில் (சிறிதளவு) பழங்களை உட்கொள்வது நியம மீறலாகாது. முக்கியமான வழிபாட்டுக் காலங்களில், உடற்சோர்வும் உளச்சோர்வுமின்றி நம்மை முழுமையாய் ஈடுபடுத்திக் கொள்ள இது அவசியமும் கூட. 

மாலை ஆறு மணி முதல் மறுநாள் காலை வரையில் பழ வகைகளையும் அறவே தவிர்த்து விரதமிருத்தல் வேண்டும். தற்பொழுது ஆலய வளாகங்களிலேயே இரவு முழுவதும் பிரசாதம் வினியோகித்து வருகின்றனர், இது புராண சம்பந்தமான வழக்கமன்று. 

நான்கு யாமங்களிலும் கண் விழித்தலோடு சிவ சிந்தையோடு இருத்தலும் மிக அவசியம். இப்புண்ணியக் காலங்களில் ஸ்ரீபஞ்சாட்சர மந்திர ஜபம், திருமுறைப் பாராயணம், சிவாலய தரிசனம்; சிவ புராணங்களை வாசித்தல் மற்றும் சிவகதைகளைப் பேசி மகிழ்ந்திருத்தல் முதலியவை சிறப்பான பலன்களைப் பெற்றுத்தர வல்லவை.

இல்லங்களில் சிவலிங்கத் திருமேனி வைத்து வழிபடும் வழக்கமுள்ளோர், ஒவ்வொரு யாமத்திலும் சிவலிங்க அபிஷேகமும்; சிவ பூஜையும் புரிதல் வேண்டும். பால்; தயிர்; நெய்; தேன்; சர்க்கரை; பஞ்சகவ்யம்; சந்தனம்; பன்னீர் என்று அவரவர்க்கு இயன்ற பொருட்களால் சிவமூர்த்திக்கு அபிஷேகித்து மகிழலாம்.  ஒவ்வொரு ஜாம பூஜையின் முடிவிலும் (அவரவர்க்கு இயன்ற அளவில்) அன்ன வகைகள்; காய்கறி வகைகள், பழங்கள்; இனிப்பு வகைகள் ஆகியற்றை நிவேதனம் புரியலாம். 

பரம புண்ணியமான இச்சிவராத்திரி காலங்களில் இல்லங்களிலுள்ள சிவலிங்கத் திருமேனியை வில்வ இலைகளால் அர்ச்சிப்பதும், திருக்கோயிலில் எழுந்தருளியுள்ள சிவமூர்த்திக்கு வில்வ இலைகளையோ; மாலையையோ சமர்ப்பிப்பதும் எண்ணிலடங்கா நற்பலன்களைப் பெற்றுத்தர வல்லது. 

இயல்பாக நம் மனம் செலுத்தும் வழியிலேயே சென்று கொண்டிருக்காமல் அதனை நன்முறையில் இறைச் சிந்தைக்கு மடைமாற்றுதலே 'மகா சிவராத்திரி' நுட்பம். இரவுப் பொழுதில் தமோ குணம் மிகுந்திருக்கும். தமோ குணத்தை வென்று, சிவஞானப் பாதையில் பயணித்து, இறுதியில் சிவமுக்தி பெற்று உய்வு பெறும் உன்னத வழிபாட்டு முறையைக் குறிப்பதே 'மகா சிவராத்திரி' வழிபாடு. 

'மேலைத் தவத்தளவே ஆகுமாம் தான்பெற்ற செல்வம்' என்பாள் அவ்வை. புண்ணியங்களின் உறைவிடமான மகா சிவராத்திரி தினத்தன்று நல்விரதமிருந்து, ஆலமுண்டருளும் ஆதிப் பரம்பொருளான சிவமூர்த்தியைப் போற்றித் துதித்து உய்வு பெறுவோம்.

வேற்றாகி விண்ணாகி நின்றாய் போற்றி
    மீளாமே ஆளென்னைக் கொண்டாய் போற்றி
ஊற்றாகி உள்ளே ஒளித்தாய் போற்றி
    ஓவாத சத்தத்(து) ஒலியே போற்றி
ஆற்றாகி அங்கே அமர்ந்தாய் போற்றி
    ஆறங்கம் நால்வேதம் ஆனாய் போற்றி
காற்றாகி எங்கும் கலந்தாய் போற்றி
    கயிலை மலையானே போற்றி போற்றி!!!

திருவொற்றியூரில் மாசி மகத் திருநாளன்று நடந்தேறும் அதிசயத் திருமணம் (மகிழடி உற்சவ நிகழ்வு):

ஆண்டுதோறும் மாசி மகத் திருநாளன்று திருவொற்றியூர் தியாகராஜர் திருக்கோயில் வளாகத்தில், தல விருட்சமான மகிழ மரத்திற்கடியில், சுந்தரமூர்த்தி நாயனார் சங்கிலி நாச்சியாருக்கு 'உன்னைப் பிரியேன்' என்று வாக்களிக்கும் நிகழ்வும், அதனைத் தொடர்ந்து திருக்கல்யாண வைபவமும் சிறப்புற நடந்தேறும். நாயன்மார்கள் அனைவரும் தத்தமது உற்சவத் திருமேனிகளில் இவ்விடத்திற்கு எழுந்தருளி வந்து, மண விழாவில் பங்கேற்று மகிழ்வர். கண் கொண்ட பயனாய் நம் சுந்தரனாரின் இவ்வுற்சவத்தினைத் தரிசித்துப் போற்றுவோம்.

(ஏயர்கோன் கலிக்காமர் புராணம் - திருப்பாடல் 260)
தாவாத பெருந்தவத்துச் சங்கிலியாரும் காண
மூவாத திருமகிழை முக்காலும் வலம்வந்து
மேவா(து) இங்(கு)யான்அகலேன் எனநின்று விளம்பினார்
பூவார்தண் புனற்பொய்கை முனைப்பாடிப் புரவலனார்.


சொக்கநாதப் பெருமானிடம் தருமி வேண்டியது என்ன? (திரைக்கதையும், உண்மை வரலாறும்)

1965ஆம் ஆண்டு வெளிவந்த, மிகப் பிரசித்தி பெற்ற; தலைசிறந்த பக்திப் படைப்பான 'திருவிளையாடல்' திரைப்படத்தில், திரைக்கதைச் சுவைக்காக தருமி எனும் இளைஞர் ஏதுமறியா ஒரு நகைச்சுவைப் பாத்திரமாகச் சித்திரிக்கப் பெற்றிருப்பார். இனி இப்பதிவில் பரஞ்சோதி முனிவர் அருளியுள்ள 'திருவிளையாடல் புராணம்' எனும் பிரமாண நூலின் வாயிலாக, இந்நிகழ்வின் மெய்மையான வரலாற்றினை அறிந்து மகிழ்வோம், 

(1)
ஆதிசைவ இளைஞரான தருமி என்பார் சொக்கநாதப் பரம்பொருளின் திருமுன்பு சென்று, 'எந்தையே, தந்தை; தாயற்றவனாய் வாழ்ந்து வரும் அடியேனுக்குத் திருமண விருப்பமிருந்தும் அதற்கான பொருளின்றி வருந்துகின்றேன். அவ்வறுமை நோய் தீர்வதற்கோர் வாய்ப்பு இச்சமயத்தில் அமைந்துள்ளது ஐயனே' என்று உளமுருக விண்ணப்பிக்கத் துவங்குகின்றார், 

(திருஆலவாய்க் காண்டம் - தருமிக்குப் பொற்கிழி அளித்த படலம் - திருப்பாடல் 2516)
தந்தை தாயிலேன் தனியனாகிய 
மைந்தனேன் புது வதுவை வேட்கையேன் 
சிந்தை நோய் செயும் செல்லல் தீர்ப்பதற்(கு) 
எந்தையே இது பதமென்(று) ஏத்தியே

(2)
'வேதநூல்களையும்; எண்ணில் பல சிவாகமங்களையும் முழுமையாகக் கற்றுணர்ந்தும், திருமண வேள்வி நடந்திராத காரணத்தால் உன் திருமேனியைத் தீண்டிப் பூசிக்கும் பேற்றினையும் உடையேன் அல்லேன்' என்று மேலும் தொடர்கின்றார் தருமி (ஆதலின் தருமி 'மகா பண்டிதர்' என்பது இத்திருப்பாடலில் இருந்து தெள்ளென விளங்கும்) , 

(திருஆலவாய்க் காண்டம் - தருமிக்குப் பொற்கிழி அளித்த படலம் - திருப்பாடல் 2517)
நெடிய வேதநூல் நிறைய ஆகமம் 
முடிய ஓதிய முறையினில் நிற்கெனும் 
வடிவில் இல்லற வாழ்க்கையின்றி நின் 
அடி அருச்சனைக்(கு) அருகன் ஆவனோ

(3)
'ஐயனே, உன் திருவுள்ளம் யாவும் அறியுமே. அடியவன் உய்வு பெறுமாறு, பாண்டிய வேந்தனின் உள்ளக் கருத்துணர்ந்து; ஒரு கவியினைப் புனைந்து அதனை அடியேனுக்கு உரைத்தருள வேண்டும்' என்று அகம் குழைந்து ஆதிப்பரம்பொருளாம் சொக்கநாத வள்ளலிடம் வேண்டுகின்றார் (ஆதலின் 'இறைவரே நேரடியாகத் தோன்றி கவியொன்றை அளித்தருள வேண்டும்' என்று வேண்டுவது தருமியின் திடபக்தியைப் பறைசாற்றுகின்றது),

(திருஆலவாய்க் காண்டம் - தருமிக்குப் பொற்கிழி அளித்த படலம் - திருப்பாடல் 2518)
ஐய யாவையும் அறிதியே கொலாம் 
வையை நாடவன் மனக் கருத்துணர்ந்(து)
உய்யவோர் கவி உரைத்(து) எனக்கருள் 
செய்ய வேண்டும் என்றிரந்து செப்பினான்

(4)
அடியற்கு எளியராம் நம் சோமசுந்தரப் பெருங்கடவுள் தருமியின் பால் கருணைத் திருநோக்கம் புரிந்தருள்கின்றார். 'கொங்கு தேர் வாழ்க்கை' எனும் கவியொன்றினைப் புனைந்து, அதனைத் தன் திருவாக்காலேயே படித்தருளிப் பின்னர் தருமிக்கு அளித்தருள, தருமி சொக்கநாதப் பெருமானை இறைஞ்சி அக்கவியைப் பெற்றுக் கொள்கின்றார் (என்னே தருமியின் தவம்). 

(திருஆலவாய்க் காண்டம் - தருமிக்குப் பொற்கிழி அளித்த படலம் - திருப்பாடல் 2519)
தென்னவன் குல தெய்வமாகிய 
மன்னர் கொங்கு தேர் வாழ்க்கை இன்தமிழ் 
சொல்நலம் பெறச் சொல்லி நல்கினார் 
இன்னல் தீர்ந்தவன் இறைஞ்சி வாங்கினான்

(இறுதிக் குறிப்பு): 
பின்னாளில் நம் அப்பர் சுவாமிகளின் திருவாக்கில் தருமி இடம் பெறுவாராகில், அந்த உத்தம சீலர் சொக்கநாதப் பெருமான்பால் கொண்டிருந்த அடிமைத் திறத்தினை என்னென்று போற்றுவது, 

('புரிந்தமரர் தொழுதேத்தும்' என்று துவங்கும் திருப்புத்தூர் தேவாரம் - திருப்பாடல் 3)
நன்பாட்டுப் புலவனாய்ச் சங்கமேறி
    நற்கனகக் கிழி தருமிக்(கு) அருளினோன் காண்

நக்கீரர் பொற்றாமரைக் குளத்திலிருந்து உயிர்பெற்று வெளிவந்த பின்னர் நிகழ்ந்தது என்ன? (அரிதினும் அரிதான திருவிளையாடல் புராணக் குறிப்புகள்)

ஆலவாய் முதல்வரின் நெற்றிக்கண் சுடரினால் நக்கீரனார் வெந்து பொடியாகிக் கரைய, இறையனாரும் திருவுருவம் மறைகின்றார். அது கண்டு பாண்டிய வேந்தனும் மற்றுமுள்ள சங்கப் புலவர்களும் பதறி, சோமசுந்தரப் பரம்பொருளிடம் பிழைபொறுக்குமாறு மன்றாடியவாறே, ஆலவாய்த் திருக்கோயிலுக்கு விரைகின்றனர். . 

அச்சமயம் பொற்றாமரைக் குளத்தருகே ஆலவாய்ப் பரம்பொருள் மதுரைப் பேரரசியான தன் காதலியாருடன் (யாவரும் காணுமாறு) திருக்காட்சி தந்தருள்கின்றார். பின் இறைவர் குளத்தைப் பார்த்தருள, நக்கீரப் பெருந்தகையார் கர்ம தேகம் நீங்கப் பெற்றுச் சிவமூர்த்தி அருளிய தூயதோர் திருமேனியுடன் வெளிப்படுகின்றார். இறையவர் தன் திருக்கரங்களால் நக்கீரரைப் பற்றிக் கரையேற்றுகின்றார் (ஆ, என்னே கருணை! இம்மூர்த்தியன்றி நமைக் கரையேற்றுவாரும் உளரோ?). 

(1)
நக்கீரர் தன்வயமற்றவராய் இறைவரையும் மீனாட்சி அம்மையையும் பன்முறை பணிந்தெழுந்து, பிழைபொறுக்குமாறு வேண்டி விண்ணப்பித்து 'கயிலை பாதி; காளத்தி பாதி' எனும் பனுவலால் அம்பிகை பாகனாரைப் பணிந்தேத்துகின்றார் (இப்பனுவல் 11ஆம் திருமுறையில் இடம்பெறுகின்றது). பின்னர் பின்வரும் 7 திருப்பாடல்களால் இறைவரின் அருட்செயல்களை ஒவ்வொன்றாகப் பட்டியலிட்டுப் போற்றி செய்கின்றார், 

(தருமிக்குப் பொற்கிழி அளித்த படலம் - திருப்பாடல் 2554)
அறனிலான் இழைத்த வேள்வி அழித்த பேராண்மை போற்றி 
மறனிலாச் சண்டிக்கீந்த மாண்பெரும் கருணை போற்றி 
கறுவிவீழ் கூற்றைக் காய்ந்த கனைகழல் கமலம் போற்றி 
சிறுவனுக்கழியா வாழ்நாள் அளித்தருள் செய்தி போற்றி

(தருமிக்குப் பொற்கிழி அளித்த படலம் - திருப்பாடல் 2555)
சலந்தரன் உடலம் கீண்ட சக்கரப் படையாய் போற்றி 
வலந்தரும் அதனை மாயோன் வழிபடக் கொடுத்தாய் போற்றி 
அலர்ந்த செங்கமலப் புத்தேள் நடுச்சிரம் அரிந்தாய் போற்றி 
சிலந்தியை மகுடம் சூட்டி அரசருள் செல்வம் போற்றி

(தருமிக்குப் பொற்கிழி அளித்த படலம் - திருப்பாடல் 2556)
திரிபுரம் பொரிய நக்க சேவகம் போற்றி மூவர்க்(கு)
அருளிய தலைமை போற்றி; அனங்கனை ஆகம் தீய 
எரியிடு நயனம் போற்றி; இரதி வந்திரப்ப மீளக் 
கரியவன் மகனுக்காவி உதவிய கருணை போற்றி

(தருமிக்குப் பொற்கிழி அளித்த படலம் - திருப்பாடல் 2557)
நகைத்தட வந்த வந்த நகுசிரம் திருகி வாங்கிச் 
சிகைத்திரு முடிமேல் வைத்த திண் திறல் போற்றி; கோயில் 
அகத்தவி சுடரைத் தூண்டும் எலிக்(கு) அரசாள மூன்று 
சகத்தையும் அளித்த தேவர் தம்பிரான் சரணம் போற்றி

(தருமிக்குப் பொற்கிழி அளித்த படலம் - திருப்பாடல் 2558)
பொருப்(பு) அகழ்ந்தெடுத்தோன் சென்னி புயமிற மிதித்தாய் போற்றி 
இருக்கிசைத்(து) அவனே பாட இரங்கி வாள் கொடுத்தாய் போற்றி 
தருக்கொடும் இருவர் தேடத் தழல் பிழம்பானாய் போற்றி 
செருக்கு விட்டவரே பூசை செய்யநேர் நின்றாய் போற்றி

(தருமிக்குப் பொற்கிழி அளித்த படலம் - திருப்பாடல் 2559)
பருங்கைமால் யானை ஏனம் பாய் புலி அரிமான் மீனம் 
இருங்குறள் ஆமை கொண்ட இகல்வலி கடந்தாய் போற்றி 
குரங்கு பாம்பெறும்பு நாரை கோழியாண் அலவன் தேரை 
கருங்குரீஇ கழுகின் அன்புக்கிரங்கிய கருணை போற்றி

(தருமிக்குப் பொற்கிழி அளித்த படலம் - திருப்பாடல் 2560)  
சாலநான் இழைத்த தீங்குக்(கு) என்னையும் தண்டம்செய்த 
கோலமே போற்றி; பொல்லாக் கொடியனேன் தொடுத்த புன்சொல் 
மாலை கேட்டென்னை ஆண்ட மலைமகள் மணாள போற்றி 
ஆலவாய் அடிகள் போற்றி அம்மைநின் அடிகள் போற்றி

(2)
இதன் பின்னர் 'கோபப் பிரசாதம்' எனும் பனுவலால் அம்மையப்பரை துதிக்கின்றார் (இத்தொகுப்பும் 11ஆம் திருமுறையில் இடம்பெறுகின்றது),

(தருமிக்குப் பொற்கிழி அளித்த படலம் - திருப்பாடல் 2561)  
ஆஅலந்தனேன் அடியனேற்(கு) அருளருள் என்னாக் 
கோவமும் பிரசாதமும் குறித்துரை பனுவல் 
பாஅலங்கலால் பரனையும் பங்கில் அங்கையற்கண் 
பூவை தன்னையும் முறை முறை போற்றி என்றேத்தா

(3)
இதன் தொடர்ச்சியாய், 'பெருந்தேவ பாணி; திருஎழுகூற்றிருக்கை' எனும் பாமாலைகளால் உமையொரு பாகனாரை மேலும் போற்றி செய்கின்றார், (இத்தொகுப்பும் 11ஆம் திருமுறையில் இடம்பெறுகின்றது),

(தருமிக்குப் பொற்கிழி அளித்த படலம் - திருப்பாடல் 2562) 
தேவதேவனைப் பின்பெரும் தேவ பாணியொடும் 
தாவிலேழ்இசை ஏழுகூற்றிருக்கையும் சாத்திப் 
பூவர் சேவடி சென்னிமேல் பூப்ப வீழ்ந்தெழுந்தான் 
பாவலோர்களும் தனித்தனி துதித்தனர் பணிந்தார்

(இறுதிக் குறிப்பு):
மதுரைத் திருக்கோயிலைத் தரிசிக்கச் செல்லுகையில், நக்கீரனார் அருளியுள்ள, மேற்குறித்துள்ள 7 போற்றித் திருப்பாடல்களையும், 'கயிலை பாதி காளத்தி பாதி', 'கோபப் பிரசாதம்', 'பெருந்தேவ பாணி', 'திருஎழுகூற்றிருக்கை' ஆகிய தொகுப்புகளையும்,  பொற்றாமரைக் குளப்படிகளில் அமர்ந்தவாறு பாராயணம் புரிந்து, அம்மையப்பரின் பரிபூரணத் திருவருளுக்கு உரியராவோம்.

சிவபரம்பொருளைத் திருமால் விடை வடிவில் தாங்கிய அற்புத நிகழ்வு:

(1)
திரிபுர சம்ஹாரத் திருநாளில் பாற்கடல் வாசரான ஸ்ரீமன் நாராயண மூர்த்தி ஆதிமுதற் பொருளான சிவபெருமானை விடை வாகன வடிவில் தாங்கிய நிகழ்வினை நம் மணிவாசகப் பெருமான் பின்வரும் திருப்பாடலில் பதிவு செய்கின்றார்,

(திருவாசகம் - திருச்சாழல் - திருப்பாடல் 15)
...
தடமதில்கள் அவைமூன்றும் தழலெரித்த அந்நாளில்
இடபமதாய்த் தாங்கினான் திருமால்காண் சாழலோ

(2)
ஸ்ரீமகாவிஷ்ணு மால்விடையான அரிய குறிப்பினை நம் சுந்தரர் பெருமானாரும் பின்வரும் திருப்பாடலில் 'திரியும் முப்புரம் தீப்பிழம்பாகச் செங்கண்மால் விடைமேல் திகழ்வானை' என்று ஐயத்திற்கு இடமின்றிப் பதிவு செய்கின்றார்,

('ஆலம் தான் உகந்தானை' எனும் திருக்கச்சி ஏகம்ப தேவாரம் - திருப்பாடல் 3) 
திரியும் முப்புரம் தீப்பிழம்பாகச்
    செங்கண்மால் விடைமேல் திகழ்வானைக்
கரியின் ஈருரி போர்த்துகந்தானைக்
    காமனைக் கனலா விழித்தானை
வரிகொள் வெள்வளையாள் உமைநங்கை
    மருவி ஏத்தி வழிபடப் பெற்ற
பெரிய கம்பனை, எங்கள் பிரானைக்
    காணக் கண்அடியேன் பெற்றவாறே

(3)
பொதுவில் பரந்தாமனாரின் விடைவடிவினை 'போர்விடை' என்று சைவத் திருமுறைகள் பேசுகின்றது.

நம் அப்பர் சுவாமிகளும் 'செருவளரும் செங்கண்மால் ஏற்றினான் காண்' என்று இக்கருத்தையே பதிவு செய்கின்றார் ('எம்பந்த வல்வினைநோய்' எனும் திருவாரூர் தேவாரத்தின் 10ஆம் திருப்பாடல்).'செருவளரும்' எனும் பதம் 'போரில் சிறந்த ஏறு - போரேறு' என்பதைக் குறிக்க வந்தது.

(4)
பின்வரும் திருப்பாடலில் நம் கச்சியப்ப சிவாச்சாரிய சுவாமிகளும், 'மாயவன் ஏற்றின் மேனிகொண்டு எந்தையைத் தாங்கினான்' என்று குறிக்கின்றார்,

(கந்தபுராணம் - தக்ஷ காண்டம் - ததீசி உத்தரப் படலம் - திருப்பாடல் 314)
சாற்றும் அவ்விடைக்கே தனைத் தாங்குபேர்
ஆற்றல் ஈந்த செயலறிந்து அல்லவோ
மாற்றலார் புரம் செற்றுழி மாயவன்
ஏற்றின் மேனிகொண்டு எந்தையைத் தாங்கினான்

(5)
(இறுதிக் குறிப்பு - 'செங்கண் மால்')

தேவாரத் திருப்பாடல்களில், பொதுவில் 'செங்கண் விடை' என்று மட்டுமே வருமேயானால் அதற்கு 'சிவந்த கண்களைக் கொண்ட ஏறு' என்றும், 'மால்விடை' என்று மட்டுமே வருமாயின் அதற்கு 'சிறப்பு பொருந்திய விடை' என்றும் பொருள் கொள்வர். எனினும் 'செங்கண் மால்' என்று ஒருசேர குறிக்கப் பெறும் திருப்பாடல்கள் அனைத்தும் திருமாலான ஸ்ரீமகாவிஷ்ணுவை மட்டுமே குறிக்க வந்தது. 

'செங்கண் மால் பிரமற்கும் அறிவொணா' எனும் திருபுள்ளிருக்குவேளூர் திருப்பாடலில் நம் அப்பர் சுவாமிகள் 'செங்கண் மால்' என்றே திருமாலைக் குறிக்கின்றார்.

சிவபரம்பொருளின் திருமேனியில் திருமால் இடபாகம் பெற்றது எவ்வாறு?

உலகீன்ற நம் உமையன்னை அரியபெரிய தவமிருந்து சிவமாம் பரம்பொருளின் திருமேனியில் இடபாகம் பெற்ற நிகழ்வினைப் புராணங்கள் பிரசித்தமாகப் பறைசாற்றுகின்றன. எனினும் முக்கண் முதல்வர் 'எதன் பொருட்டு மறிகடல் வண்ணரான ஸ்ரீமகாவிஷ்ணுவிற்கு தன் திருமேனி பாகத்தினை நல்கியருளினார்?' என்பது அரிய குறிப்பாகவே விளங்கி வருகின்றது. இனி இப்பதவில் அது குறித்துச் சிந்தித்துத் தெளிவுறுவோம்,

முதற்கண் சிவமூர்த்தியின் 'சங்கர நாராயண' திருவடிவிற்கான தேவார மூவரின் திருப்பாடல் குறிப்புகளைக் காண்போம்,

'மண்ணுமோர் பாகமுடையார் மாலுமோர் பாகமுடையார்' என்பது ஞானசம்பந்தப் பெருமானாரின் திருவாக்கு (திருப்பெரும்புலியூர் தேவாரம் -திருப்பாடல் 1)

'சீரேறு திருமாலோர் பாகத்தான் காண்' என்று நம் அப்பர் சுவாமிகள் குறிக்கின்றார் ('கைம்மான மதக்களிற்றின்' எனும் திருவாரூர் தேவாரம் - திருப்பாடல் 5)

'திருமாமகள் கோன் திருமாலோர் கூறன்' என்று நம்பிகள் பெருமானார் பதிவு செய்கின்றார் ('முந்தையூர்' எனும் திருஇடையாறு தேவாரம் - திருப்பாடல் 9)

இனி இப்பதிவு முன்னிறுத்தும் கேள்விக்கான விடையினை அறிய திருமந்திரத்திற்குள் பயணிப்போம்,

(1)
ஆதிமுதற் பொருளான சிவமூர்த்தி, திருமாலின் பூசனையால் திருவுள்ளம் மகிழ்ந்து, காத்தற் தொழிலை சிறந்து மேற்கொள்ளும் பொருட்டு சக்கரமொன்றினை அளித்தருள்கின்றார். அதீத சக்தி பொருந்திய அதனைத் தரிக்கஒண்ணாமையால் திருமால் சிவபெருமானை மீண்டுமொரு முறை அர்ச்சித்துப் போற்றி விண்ணப்பிக்க, சிவமூர்த்தி வைகுந்த வாசருக்குத் தன் சக்தியினில் ஒன்றைக் கூறிட்டுக் கொடுத்துப் பேரருள் புரிகின்றார்,

(சக்கரப் பேறு - திருமந்திரம் - இரண்டாம் தந்திரம் - திருப்பாடல் 2)
சக்கரம் பெற்றுநல் தாமோதரன் தானும்
சக்கரம் தன்னைத் தரிக்க ஒண்ணாமையால்
மிக்கஅரன் தன்னை விருப்புடன் அற்சிக்கத்
தக்கநற் சத்தியைத் தான்கூறு செய்ததே

(2)
தன் சக்தியைக் கூறிட்டுக் கொடுத்து, ஸ்ரீமன் நாராயணர் அதனை முழுவதுமாய் கிரகித்துக் கொள்ள, தன் திருமேனியின் பாகமொன்றினையும் கூறிட்டுக் கொடுத்து அருள் புரிகின்றார்,

(சக்கரப் பேறு - திருமந்திரம் - இரண்டாம் தந்திரம் - திருப்பாடல் 3)
கூறதுவாகக் குறித்த நற்சக்கரம்
கூறது செய்து கொடுத்தனன் மாலுக்குக்
கூறது செய்து கொடுத்தனன் சத்திக்குக்
கூறது செய்து தரித்தனன் கோலமே

ஸ்ரீமகாவிஷ்ணு சிவபெருமானிடமிருந்து சக்கரப் படையைப் பெற்ற அற்புத நிகழ்வு:

கொண்டல் வண்ணரான ஸ்ரீமன் நாராயணரை 'ஆழியான்', 'ஆழி வலவன்', 'நேமியான்' என்று சக்கரதாரியாக தேவாரப் பனுவல்கள் குறிக்கின்றன. சீர்மையெலாம் பொருந்திய இச்சக்கரப் படையைத் திருமால் பெற்று மகிழ்ந்த அற்புத நிகழ்வினை இனிக் காண்போம்,

புருஷோத்தமரான திருமால், காத்தற் தொழிலைச் சிறந்து மேற்கொள்ளும் பொருட்டு, சலந்தராசுர சம்ஹார காலத்தில் சிவபரம்பொருள் பிரயோகித்த சக்கரப் படையைப் பெற வேண்டி, திருநீற்றினைத் தரித்து, நியமத்துடன் ஆயிரம் தாமரை மலர்களால் அனுதினமும் முக்கண் முதல்வரை அர்ச்சித்து வருகின்றார். இந்நிலையில் ஒரு சமயம் தாமரை மலர்களுள் ஒன்றினைச் சிவமூர்த்தி மறைத்தருள, தன் திருக்கண்களில் ஒன்றையே மலரென இட்டு அப்பூசையை நிறைவு செய்கின்றார் மாதவனார்.  

இவ்வரிய செயலால் திருவுள்ளம் மகிழ்ந்தருளும் அம்பிகை பாகத்து அண்ணலாரும் பூமகள் கேள்வரான திருமாலுக்கு அச்சக்கரப் படையினை அளித்துப் பேரருள் புரிகின்றார். இக்காரணத்தால் பாற்கடல் வாசனார் 'புண்டரீகாக்ஷன்; கமலக்கண்ணன்' முதலிய திருநாமங்களால் போற்றப் பெறுகின்றார்.

இனி இந்நிகழ்விற்கான அகச்சான்றுகளை நால்வர் பெருமக்கள் மற்றும் கச்சியப்ப சிவாச்சாரியாரின் திருப்பாடல்கள் வாயிலாகச் சிந்தித்து மகிழ்வோம், 

(1 - ஞானசம்பந்தர் தேவாரம்)
(திருவீழிமிழலை - 'ஏரிசையும்' எனும் திருப்பதிகம் - திருப்பாடல் 8 )
தருப்பமிகு சலந்தரன் தன் உடல் தடிந்த சக்கரத்தை வேண்டியீண்டு
விருப்பொடு மால் வழிபாடு செய்யஇழி விமானம்சேர் மிழலையாமே

(திருவீழிமிழலை - 'புள்ளித்தோலாடை' எனும் திருப்பதிகம் - திருப்பாடல் 7)
தன்தவம் பெரிய சலந்தரன் உடலம் தடிந்த சக்கரம் எனக்கருள் என்று 
அன்றுஅரி வழிபட்டு இழிச்சிய விமானத்து இறையவன் 

(2 - அப்பர் தேவாரம்)
(திருவீழிமிழலை - 'பூதத்தின் படையர்' எனும் திருப்பதிகம் - திருப்பாடல் 8 )
நீற்றினை நிறையப் பூசி நித்தல் ஆயிரம் பூக்கொண்டு
ஏற்றுழி ஒருநாள் ஒன்றுகுறையக் கண்நிறைய இட்ட
ஆற்றலுக்கு ஆழி நல்கியவன் கொணர்ந்து இழிச்சும் கோயில்
வீற்றிருந்து அளிப்பர் வீழிமிழலையுள் விகிர்தனாரே

('பருவரை ஒன்றுசுற்றி' எனும் பொதுத் திருப்பதிகம் - திருப்பாடல் 10)
தடமலர் ஆயிரங்கள் குறைவொன்றதாக நிறைவென்று தன்கண் அதனால்
உடன்வழிபாடு செய்த திருமாலை எந்தை பெருமான்உகந்து மிகவும்
சுடரடியால் முயன்று சுழல்வித்து அரக்கன் இதயம் பிளந்த கொடுமை
அடல்வலி ஆழி ஆழியவனுக்கு அளித்த அவனா நமக்கொர் சரணே

(3 - சுந்தரர் தேவாரம்)
(திருக்கலயநல்லூர் - 'குரும்பைமுலை' எனும் திருப்பதிகம் - திருப்பாடல் 2)
செருமேவு சலந்தரனைப் பிளந்த சுடர்ஆழி
    செங்கண்மலர் பங்கயமாச் சிறந்தானுக்கருளி

(4 - திருவாசகம்)
(திருத்தோணோக்கம் - திருப்பாடல் 10)
பங்கயம் ஆயிரம் பூவினில்ஓர் பூக்குறையத்
தம்கண் இடந்துஅரன் சேவடிமேல் சாத்தலுமே
சங்கரன் எம்பிரான் சக்கரம் மாற்குஅருளியவாறு
எங்கும் பரவிநாம் தோணோக்கம் ஆடாமோ

(5 - கந்தபுராணம்)
(தக்ஷ காண்டம் - ததீசி யுத்தரப் படலம் - திருப்பாடல் 297)
அவன் சலந்தரனை வீட்டும் ஆழியை வாங்கப் பன்னாள்
சிவன்கழல் வழிபட்டு ஓர்நாள் செங்கணே மலராச் சாத்த
உவந்தனன் விடைமேல் தோன்றி அப்படை உதவப் பெற்று
நிவந்தனன் அதனால் வையம் நேமியான் என்பமாதோ

திருமகள் வழிபட்ட சிவத்தலங்கள் மற்றும் அன்னை ஸ்ரீமகாலக்ஷ்மி தொடர்பான அரிய திருமுறைக் குறிப்புகள்:

வைகுந்த வாசனாரின் திருமார்பில் எழுந்தருளியிருக்கும் அன்னை ஸ்ரீமகாலக்ஷ்மியை 'செய்ய மாது; செய்யவள், செய்யாள், திருமகள்; திருமங்கை; திருவினாள்; பூமகள்' என்று தேவாரப் பனுவல்கள் சிறப்பிக்கின்றன. 

(1)
அன்னை ஸ்ரீமகாலக்ஷ்மி பல்வேறு சிவத்தலங்களில் வழிபட்டுள்ள நிகழ்வுகளைத் தலபுராணங்கள் நமக்கு அறிவிக்கின்றன. 'செய்யாள் வழிபட நின்றார் தாமே' என்று பின்வரும் திருவாலங்காட்டுத் திருப்பாடலில் நம் அப்பர் சுவாமிகள் பதிவு செய்கின்றார்,

(திருவலாலங்காடு - 'ஒன்றா உலகனைத்தும்' எனும் திருப்பதிகம் - திருப்பாடல் 7)
மையாரும் கண்ட மிடற்றார் தாமே
    மயானத்தில் ஆடல் மகிழ்ந்தார் தாமே
ஐயாறும் ஆரூரூம் ஆனைக்காவும்
    அம்பலமும் கோயிலாக் கொண்டார் தாமே
பையாடரவம் அசைத்தார் தாமே
    பழனை பதியா உடையார் தாமே
செய்யாள் வழிபட நின்றார் தாமே
    திருவாலங்காடுறையும் செல்வர் தாமே

(2)
அன்னை ஸ்ரீமகாலக்ஷ்மி திருவாரூரில் அரியபெரிய தவம் புரிந்து, அனைத்து செல்வங்களையும், முடிவிலா மங்கலங்களையும், ஆரூருறைப் பரம்பொருளான சிவபெருமானின் திருவருளால் பெற்ற நிகழ்வினைப் பின்வரும் திருப்பாடலில் கச்சியப்ப சிவாச்சாரியார் பதிவு செய்கின்றார் ('மலர்மென் பாவை' என்பது திருமகளாரைக் குறிக்க வந்தது),

(கந்த புராணம் - உற்பத்தி காண்டம் - குமாரபுரிப் படலம் - திருப்பாடல் 81)
எழில்வளம் சுரக்கும் தொல்லை இலஞ்சியம் கானம் நோக்கி
மழவிடை இறைவன் பொற்றாள் வணங்கியே,மலர்மென் பாவை
முழுதுள திருவும் என்றும் முடிவில் மங்கலமும் எய்த
விழுமிதின் நோற்றுப் பெற்ற வியன் திருவாரூர் கண்டான்

(3)
'திருமகட்குச் செந்தாமரையாம் அடி' என்பது நம் அப்பர் சுவாமிகளின் அற்புதத் திருவாக்கு. 'அம்பிகை பாகத்து அண்ணலாரின் திருவடி நிலைகள் செந்தாமரைகள் ஆதலின் அன்னை ஸ்ரீமகாலக்ஷ்மி அங்கு சிறப்புடன் எழுந்தருளி இருக்கின்றாள்' என்பது இதன் உட்கருத்து. 

(திருவதிகை - 'அரவணையான் சிந்தித்து' எனும் திருப்பதிகம் - திருப்பாடல் 6)
திருமகட்குச் செந்தாமரையாம் அடி
    சிறந்தவர்க்குத் தேனாய் விளைக்கும்அடி
பொருளவர்க்குப் பொன்னுரையாய் நின்றஅடி
    புகழ்வார் புகழ்தகைய வல்லஅடி
உருவிரண்டும் ஒன்றோடொன்று ஒவ்வாஅடி
    உருவென்று உணரப்படாத அடி
திருவதிகைத் தென்கெடில நாடன்அடி
    திருவீரட்டானத்தெம் செல்வன்அடி

(4)
வெவ்வேறு யுக கால கட்டங்களில், ஸ்ரீமன் நாராயணர் அன்னை ஸ்ரீமகாலக்ஷ்மியைப் பிரிய நேரிட்ட சமயங்களில், சிவழிபாடு புரிந்து; சிவபரம்பொருளின் திருவருளாலேயே மீண்டும் இணையப் பெற்றுள்ள நிகழ்வுகளைப் புராணங்கள் விவரிக்கின்றன. பின்வரும் சிவபுரத் திருப்பாடலில் 'செய்யவளை மாலுக்கு ஈந்த சிவனவன் காண்' என்று நம் அப்பர் சுவாமிகள் பதிவு செய்கின்றார்,

(திருசிவப்புரம் - 'வானவன் காண்' எனும் திருப்பதிகம் - திருப்பாடல் 7)
வெய்யவன் காண்; வெய்ய கனலேந்தினான் காண்
    வியன்கெடில வீரட்டம் மேவினான் காண்
மெய்யவன் காண்; பொய்யர்மனம் விரவாதான் காண்
    வீணையோடிசைந்து மிகு பாடல் மிக்க
கையவன் காண்; கையில் மழுவேந்தினான் காண்
    காமனங்கம் பொடிவிழித்த கண்ணினான் காண்
செய்யவன் காண்; செய்யவளை மாலுக்கீந்த
    சிவனவன் காண், சிவபுரத்தெம் செல்வன் தானே

ஸ்ரீராமச்சந்திர மூர்த்தி வழிபாடு செய்த சிவத்தலங்கள்:

தசரத திருக்குமாரரான ஸ்ரீராமச்சந்திர மூர்த்தி தமிழகப் பகுதிகளிலுள்ள பல்வேறு சிவாலயங்களைத் தரிசித்து வழிபாடு புரிந்துள்ள நிகழ்வுகளை எண்ணிறந்த தலபுராண; திருமுறைக் குறிப்புகள் நமக்குப் பறைசாற்றுகின்றன. இனி இப்பதிவில் கொண்டல் வண்ணரான ஸ்ரீராமர் மூன்று தலங்களில் சிவபரம்பொருளை வழிபட்டதற்கான தேவாரக் குறிப்புகளைக் காண்போம்,

(1)
திருவாரூர் மாவட்டத்திலுள்ள, 'திருஉசாத்தானம்' எனும் காவிரித் தென்கரைத் தலத்தில், ஸ்ரீராமர்; அவர்தம் இளவலான இலக்குவன், ஜாம்பவான், சுக்ரீவன்; அனுமன் ஆகியோர் வழிபட்டுள்ள நிகழ்வினை நம் ஞானசம்பந்தப் பெருமானார் பதிவு செய்கின்றார்,

(திருஉசாத்தானம் - 'நீரிடை' எனும் ஞானசம்பந்தர் தேவாரம் - திருப்பாடல் 1)
நீரிடைத் துயின்றவன்; தம்பி; நீள் சாம்புவான்
போருடைச் சுக்கிரீவன்; அநுமான் தொழக்
காருடை நஞ்சுண்டு காத்தருள் செய்தஎம்
சீருடைச் சேடர்வாழ் திருஉசாத்தானமே

(2)
விழுப்புரம் மாவட்டத்திலுள்ள, 'திருஆமாத்தூர்' எனும் நடுநாட்டுத் தலத்தில், ஸ்ரீராமர் வழிபட்டுள்ள குறிப்பினை நம் அப்பர் சுவாமிகள் 'இராமனும் வழிபாடு செய் ஈசனை' என்று குறிக்கின்றார், 

(திருஆமாத்தூர் - 'மாமாத்தாகிய' எனும் அப்பர் தேவாரம் - திருப்பாடல் 5)
குராமன்னும் குழலாள் ஒரு கூறனார்
அராமன்னும் சடையான் திருஆமாத்தூர்
இராமனும் வழிபாடு செய் ஈசனை
நிராமயன் தனை நாளும் நினைமினே

(3)
கடலூர் மாவட்டத்திலுள்ள, 'திருநாரையூர்' எனும் காவிரி வடகரைத் தலத்தில், ஸ்ரீராமர் வழிபாடு செய்துள்ள நிகழ்வினைக் 'கழுகினொடு காகுத்தன் கருதிஏத்தும் நம்பனை' என்று நம் அப்பர் சுவாமிகள் போற்றுகின்றார் (கழுகு என்பது 'சடாயு; சம்பாதியையும், 'காகுத்தன்' எனும் திருப்பெயர் 'ஸ்ரீராமச்சந்திர மூர்த்தியையும் குறிக்க வந்தது).

(திருநாரையூர் - 'சொல்லானை' எனும் அப்பர் தேவாரம் - திருப்பாடல் 4)
செம்பொன்னை; நன்பவளம் திகழும் முத்தைச்
    செழுமணியைத், தொழுமவர்தம் சித்தத்தானை
வம்பவிழும் மலர்க்கணை வேள் உலக்க நோக்கி
    மகிழ்ந்தானை. மதிற்கச்சி மன்னுகின்ற
கம்பனை,எம் கயிலாய மலையான் தன்னைக்
    கழுகினொடு காகுத்தன் கருதிஏத்தும்
நம்பனை,எம் பெருமானை, நாதன் தன்னை
    நாரையூர் நன்னகரில் கண்டேன் நானே

(காகுத்தன் எனும் திருநாமம் தோன்றிய காரணம்): 
சித்திரகூடத்தில் ஸ்ரீராமர் அன்னை ஸ்ரீஜானகியின் திருமடியில் தலை வைத்து துயில் புரிந்திருக்க, காக வடிவில் அங்கு வரும் இந்திரனின் மகனான ஜெயந்தன் அன்னையின் திருமார்பினைத் தீண்ட முனைகின்றான். 

ஸ்ரீராமர் வெகுண்டு, அங்கிருந்த சிறு புல்லொன்றினையே அஸ்திரமாக அதன் மீது ஏவ, எண்ணிறந்த உலகங்களுக்கு ஓடோடிச் சென்று கதறியும் எவரொருவரும் அபயம் அளிக்க முன்வராமையினால், மீண்டும் ஸ்ரீராமரின் திருவடிகளிலேயே சென்று தஞ்சமடைகின்றான். 

கோசலை மைந்தன் ஜெயந்தனாகிய காகத்தின் ஒரு கண் பார்வையினை மட்டும் அப்புல்லினால் குத்தி நீக்கி, பிழை பொறுத்தருள்கின்றார்.

ஸ்ரீவாமன மூர்த்தி வழிபட்ட இரு சிவத்தலங்கள்:

வைகுந்த வாசரான ஸ்ரீமகாவிஷ்ணுவின் வாமன அவதார நிகழ்வுகள் எண்ணிறந்த தேவாரத் திருப்பதிகங்களில் குறிக்கப் பெற்றுள்ளன.

(1)
(ஸ்ரீவாமன மூர்த்தி மகாபலிச் சக்கரவர்த்தியிடம் மூவடி மண் தானமாகக் கேட்ட நிகழ்வு):

மண் தனை இரந்து கொண்ட மாயன் ('மனைவிதாய்' எனும் திருநாகைக்காரோண அப்பர் தேவாரம் - 4ஆம் திருப்பாடல்)

மாவலி பால்  காணிக்கு இரந்தவன் ('மாணிக்கு உயிர் பெற' எனும் திருமாற்பேறு அப்பர் தேவாரம் - 1ஆம் திருப்பாடல்)

(2)
(ஸ்ரீவாமன மூர்த்தி விண்ணையும் மண்ணையும் ஈரடியால் அளந்தருளிய நிகழ்வு)

மண்ணளந்த மணிவண்ணர் (திருவலம்புரம் - அப்பர் தேவாரம் - 7ஆம் திருப்பாடல்)

பாலனாகி உலகளந்த படியானும் ('நல்லான் காண்' எனும் திருவலிவல அப்பர் தேவாரம் - 10ஆம் திருப்பாடல்)

மண்ணினைத் தாவ நீண்ட மாலினுக்கு அருளும் வைத்தார் ('நங்கையைப் பாகம் வைத்தார்' எனும் திருக்கழிப்பாலை அப்பர் தேவாரம் - 2ஆம் திருப்பாடல்)

இனி இப்பதிவில் ஸ்ரீவாமன மூர்த்தி வழிபட்ட இரு சிவத்தலங்கள் பற்றிய அகச் சான்றுகளைக் காண்போம், 

(1)
திருமாணிகுழியில், நியமத்துடன் ஸ்ரீவாமன மூர்த்தி வழிபாடு செய்த நிகழ்வினைப் பின்வரும் திருப்பாடலில் சம்பந்தப் பெருமானார் பதிவு செய்கின்றார்,

(திருமாணிகுழி - 'பொன்னியல்' எனும் சம்பந்தர் தேவாரம் - திருப்பாடல் 4)
நித்த நியமத் தொழிலனாகி நெடுமால் குறளனாகி மிகவும்
சித்தமதொருக்கி வழிபாடு செயநின்ற சிவலோகன் இடமாம்
கொத்தலர் மலர்ப்பொழிலின் நீடுகுல மஞ்ஞை நடமாடல் அதுகண்டு 
ஒத்தவரி வண்டுகள் உலாவி இசைபாடுதவி மாணிகுழியே

(2)
பின்வரும் திருப்பாடலில், உலகையளந்த ஸ்ரீவாமன மூர்த்தி திருக்கண்ணார்கோயிலில் சிவலிங்கத் திருமேனியைப் பிரதிஷ்டை செய்து வழிபட்ட நிகழவினை ஞானசம்பந்த மூர்த்தி பதிவு செய்கின்றார். 'தற்குறி' எனும் பதம், சிவபரம்பொருளின் அடையாளமான சிவலிங்கத் திருமேனியைக் குறிக்க வந்தது).

('தண்ணார் திங்கள்' எனும் திருக்கண்ணார்கோயில் - சம்பந்தர் தேவாரம் - திருப்பாடல் 5)
மறுமாண் உருவாய் மற்றிணையின்றி வானோரைச்
செறு மாவலிபால் சென்று உலகெல்லாம் அளவிட்ட
குறுமாண் உருவன் தற்குறியாகக் கொண்டாடும்
கறுமா கண்டன் மேயது கண்ணார் கோயிலே

ஸ்ரீஆதிவராக மூர்த்தி வழிபட்ட இரு சிவத்தலங்கள்:

ஸ்ரீமன் நாராயண மூர்த்தியின் தசாவதார நிகழ்வுகள் எண்ணிறந்த தேவாரப் பனுவல்களில் குறிக்கப் பெற்றுள்ளன. 'ஆகம் பத்து  அரவணையான்' என்று நம் அப்பர் சுவாமிகள் தசாவதாரங்களைக் குறிக்கின்றார்,

('கரவாடும்' எனும் திருக்கச்சி ஏகம்பத் திருப்பதிகம்: திருப்பாடல் 9)
ஆகம்பத்து அரவணையான் அயன் அறிதற்கரியானைப்
பாகம் பெண்ஆண் பாகமாய் நின்ற பசுபதியை
மாகம்ப மறையோதும் இறையானை, மதிற்கச்சி
ஏகம்ப மேயானை என்மனத்தே வைத்தேனே

இனி இப்பதிவில் சிவபுரம்; சீகாழி முதலிய தலங்களில் ஸ்ரீவராக மூர்த்தி வழிபட்டதற்கான திருமுறைச் சான்றுகளைக் காண்போம், 

(1)
பின்வரும் சிவபுரத் திருப்பாடலில் 'தன் திருமுகத்திலுள்ள கோரப்பல்லின் நுனியில் இப்புவியைச் சுமந்து அதனை நிலைநிறுத்திக் காத்தருளிய ஸ்ரீவராக மூர்த்தி வழிபாடு செய்த சிவபுரம்' என்று சம்பந்தச் செல்வர் போற்றுகின்றார் ('எயிறதன் உதிமிசை இதம்அமர் புவிஅது நிறுவிய எழில்அரி வழிபட அருள்செய்த'),    

('புவம்வளி' எனும் சிவபுரத் திருப்பதிகம் - திருப்பாடல் 7):
கதமிகு கருஉருவொடு உகிரிடை வடவரை கணகணவென
மதமிகு நெடுமுகன் அமர்வளை மதிதிகழ் எயிறதன் உதிமிசை
இதம்அமர் புவிஅது நிறுவிய எழில்அரி வழிபட அருள்செய்த
பதமுடை அவனமர் சிவபுரம் நினைபவர் நிலவுவர் படியிலே

(2)
பின்வரும் மற்றொரு சிவபுரத் திருப்பாடலில், 'வென்றிகொள் எயிற்று வெண்பன்றி முன்னாள் சென்றடி வீழ்தரு சிவபுரமே' என்று குறிக்கின்றார் சம்பந்தப் பெருமானார்,

('இன்குரலிசை' எனும் சிவபுரத் திருப்பதிகம் - திருப்பாடல் 2)
அன்றடல் காலனைப் பாலனுக்காய்ப்
பொன்றிட உதைசெய்த புனிதன்நகர்
வென்றிகொள் எயிற்று வெண்பன்றி முன்னாள்
சென்றடி வீழ்தரு சிவபுரமே

(3)
பின்வரும் சீகாழித் திருப்பாடல் கடினப் பதங்களைக் கொண்டது, இறுதி இரு வரிகளில், 'ஸ்ரீவராக மூர்த்தி, இரண்யாட்சனை சம்ஹாரம் புரிந்தருளிய பழி தீர, சீகாழித் திருத்தலத்தில் வழிபாடு செய்த நிகழ்வினை' நம் சம்பந்தப் பெருமானார் பதிவு செய்கின்றார், 

('சுரர்உலகு' எனும் சீகாழித் திருப்பதிகம் - திருப்பாடல் 6)
நிராமய பராபர புராதன பராவுசிவ, ராகஅருள்என்று
இராவும்எதிராயது பராநினை புராணனன் அமர்ஆதி பதியாம்
அராமிசை இராதஎழில் தராய, அர பராயண வராகஉரு !வா
தராயனை, விராயெரி பராய்மிகு தராய்மொழி விராய பதியே

சிவபெருமான் பன்றிக் கொம்பினைத் திருமார்பில் அணிந்திருப்பது எதனால்?

(1)
இரண்யாட்சன் எனும் அசுரன், நமது அண்டத்திலுள்ள 14 உலகங்களுள் ஒன்றான இப்பூமியினைக் கவர்ந்து கொண்டு, பூமிக்கு அடியிலுள்ள இறுதி உலகமான பாதாள லோகத்திற்குச் சென்று விடுகின்றான். ஸ்ரீமன் நாராயணர் பிரமனின் நாசியிலிருந்து வராக ரூபியாய் வெளிப்பட்டுத் தோன்றுகின்றார். மேருமலை போன்று நெடிதுயர்ந்த மகா வராக வடிவினராகி, இரண்யாட்சயனை சம்ஹாரம் புரிந்து, நிலவுலகினை மீண்டும் அதன் முந்தைய இடத்தில் நிலைநிறுத்திக் காக்கின்றார். இதன் பின்னர் வராக மூர்த்தி தன்னிலை இழக்கும் சூழலொன்று உருவாகின்றது,

(கந்தபுராணம் - தக்ஷ காண்டம் - ததீசி உத்தரப் படலம் - திருப்பாடல் 18) 
ஓரிமைக்கு முன் பாதலம் தன்னில் மால் உற்றுக்
கூரெயிற்றினால் பாய்ந்து பொற்கண்ணனைக் கொன்று
பாரினைக்கொடு மீண்டுமுன் போலவே பதித்து
வீரமுற்றனன் தன்னையே மதித்தனன் மிகவும்
-
(மச்ச; கூர்ம; வராக; நரசிம்ம அவதாரங்கள் ஒவ்வொன்றிலும், இது போன்றதொரு தன்னிலை இழக்கும் நிகழ்வு குறிக்கப் பெற்றுள்ளது. இதன் காரணத்தை விளக்கும் புராணக் குறிப்பொன்றினைப் பிறிதொரு சமயம் சிந்திக்கலாம்). 

(2)
வராக மூர்த்தி பூமிக்கும் அதனைச் சூழ்ந்துள்ள கடற்பரப்பிற்கும் பெரும் அழிவினை உருவாக்க  முனைய, நீலகண்டப் பரம்பொருளான சிவபெருமான் அங்கு எழுந்தருளி வருகின்றார்,

(கந்தபுராணம் - தக்ஷ காண்டம் - ததீசி உத்தரப் படலம் - திருப்பாடல் 19) 
மாலும் அப்பகல் அகந்தையாய் உணர்வின்றி மருப்பால்
ஞாலம் யாவையும் அழிதர இடந்தவை நனிசூழ்
வேலை தன்னையும் உடைத்தனன் அன்னதோர் வேலை
ஆலமார் களத்து அண்ணல்கண்டு எய்தினான் அங்கண்

(3)
கண்ணுதற் கடவுளான சிவமூர்த்தி அவ்வராகத்தின் கொம்புகளுள் ஒன்றினைப் பறிக்கின்றார், இச்செயலால் தன்னிலை பெறும் ஆதிவராக மூர்த்தி சிவபரம்பொருளைப் பணிந்தேத்த, ஆலமுண்ட அண்ணலாரும் அவ்விடத்தினின்றும் மறைந்தருள்கின்றார்,

(கந்தபுராணம் - தக்ஷ காண்டம் - ததீசி உத்தரப் படலம் - திருப்பாடல் 20) 
கண்டு கண்ணுதல் அவன் மருப்பொன்றினைக் கரத்தால்
கொண்டு வல்லையில் பறித்தலும், உணர்வுமுன் குறுக
விண்டு மற்றதும் பறிப்பன் இங்கிவன்என வெருவிப்
பண்டு போல நின்றேத்தலும் போயினன் பரமன்

(4)
அன்று முதல் அம்பிகை பாகத்து அண்ணல், நடந்தேறிய இந்நிகழ்விற்கான அடையாளமாய், அப்பன்றிக் கொம்பினைத் தன் திருமார்பினில் அணிந்தவாறு திருக்காட்சி தருகின்றார்,

(கந்தபுராணம் - தக்ஷ காண்டம் - ததீசி உத்தரப் படலம் - திருப்பாடல் 21) 
அன்று கொண்டதோர் மருப்பினைச் சின்னமா அணிந்தான்
இன்றும் அங்கவன் மார்பிடைப் பிறையென இலங்கும்
ஒன்று மற்றிது கேட்டனை நின்றதும் உரைப்பாம்
நன்று தேர்ந்துணர் மறைகளும் இத்திறம் நவிலும்

இனி உமையொரு பாகனார் 'ஏனம்' எனும் பன்றிக் கொம்பினை அணிவதற்கான தேவாரக் குறிப்புகளைக் காண்போம்,

(1)
(சம்பந்தர் தேவாரம் - திருப்பேணுபெருந்துறை - திருப்பாடல் 1)
பைம்மா நாகம் பன்மலர் கொன்றை பன்றி வெண்கொம்பொன்று பூண்டு

(2)
(அப்பர் தேவாரம் - தில்லை - 'பாளையுடை' எனும் திருப்பதிகம் - திருப்பாடல் 6)
வானத்தவர்உய்ய வன்னஞ்சை உண்ட கண்டத்திலங்கும்
ஏனத்துஎயிறு கண்டால் பின்னைக் கண்கொண்டு காண்பதென்னே

(3)
(சுந்தரர் தேவாரம் - திருக்கேதீஸ்வரம் - 'நத்தார்படை' எனும் திருப்பதிகம் - திருப்பாடல் 7)
ஏனத்து எயிறணிந்தான் திருக்கேதீச்சரத்தானே

சிவபெருமான் ஆமை ஓட்டினை அணிகலனாக அணிந்திருப்பது எதனால்?

தேவர்களும் அசுரர்களும் மந்தர மலையை மத்தாக்கிப் பாற்கடலைக் கடைகையில், ஸ்ரீமன் நாராயணர் கூர்ம அவதார மூர்த்தியாய்த் தோன்றி அம்மலை கவிழாது நிலைநிறுத்திக் காக்கின்றார். அமுதம் வெளிப்படுகின்றது, 'அதனை எவ்விதம் பகிர்வது?' என்பது குறித்து தேவர்களுக்கும் அசுரர்களுக்கும் கடும் வாக்குவாதமும், போரும் நடந்தேறத் துவங்குகின்றது. 

இந்நிலையில் கருங்கடல் வண்ணரான கூர்மாவதார மூர்த்தி தன்னிலை இழக்க நேரிடுகின்றது. 

(மச்ச; கூர்ம; வராக; நரசிம்ம அவதாரங்கள் ஒவ்வொன்றிலும், இது போன்றதொரு தன்னிலை இழக்கும் நிகழ்வு குறிக்கப் பெற்றுள்ளது. இவை தற்செயலாக நடந்தேறும் நிகழ்வுகள் அன்று, இதற்கான காரணத்தை விளக்கும் புராணக் குறிப்பொன்றினைப் பிறிதொரு சமயம் சிந்திக்கலாம்). 

(1)
கூர்ம மூர்த்தி, திசைகளின் எல்லைகள் வரையிலும் அலைகள் மேலெழுந்து ஆர்ப்பரிக்குமாறு கடல்களைக் கலக்கத் துவங்குகின்றார், உலகங்கள் அழிவுறும் நிலை உருவாகின்றது. இத்தருணத்தில் திருக்கயிலைப் பரம்பொருளான சிவமூர்த்தி 'நாராயணர் தன்னுடைய காத்தல் தொழிலைத் துறந்தனர் போலும்' என்று தன் திருவுள்ளத்தில் கருதுகின்றார், 

(கந்தபுராணம் - தக்ஷ காண்டம் - ததீசி உத்தரப் படலம் - திருப்பாடல் 25) 
அகந்தை எய்தியே யாவையும் தேற்றலான், அலைபோய்த்
திகந்தம் உற்றிட வேலைகள் உழக்கினன் திரியச்
சகம் தனக்கு அழிவெய்தலும், தனதருள் தன்மை
இகந்தனன் கொலாம் கண்ணன் என்று உன்னினன் எங்கோன்

(2)
மறைமுதல்வரான சிவமூர்த்தி அக்கணமே கூர்ம மூர்த்தியின் முன்னர் எழுந்தருளிச் சென்று, சினந்து நோக்கி, அக்கூர்ம வடிவத்தினைத் தன் திருக்கரங்களால் அழுத்தமாகப் பற்றி, அதன் வலிமையை முற்றிலும் நீக்குகின்றார்,  

(கந்தபுராணம் - தக்ஷ காண்டம் - ததீசி உத்தரப் படலம் - திருப்பாடல் 26) 
அற்றை நாள் அவண் வல்லையில் ஏகியே அரி தன்
முற்றலாமையின் உருவினை நோக்கியே முனிந்து
கற்றை வார்சடைக் கண்ணுதல் யாப்புறக் கரத்தால் 
பற்றி ஆங்கவன் அகந்தையும் வன்மையும் பறித்தான்

(3)
ஆதி மூர்த்தியின் திருச்செயலால் புருஷோத்தமரான திருமால் மெய்யுணர்வு எய்தி, தன் முந்தைய நிலைக்கு மீண்டு, மதி சூடும் அண்ணலாரைப் பணிந்து போற்ற, 'அசுரர்களை மாய்த்து தேவர்களுக்கு அமிர்தத்தை ஈவாய் ஆகுக' என்றருளிச் செய்து சிவபெருமான் மறைந்தருள்கின்றார். இதன் பின்னரே பரந்தாமனாரின் மோகினி அவதாரம் நிகழ்ந்தேறுகின்றது, 

(கந்தபுராணம் - தக்ஷ காண்டம் - ததீசி உத்தரப் படலம் - திருப்பாடல் 27) 
நினைந்து தொல்உருக் கொண்டனன் புகழ்தலும், நிலவைப்
புனைந்த செஞ்சடை நின்மலன் 'அவுணரைப் போக்கி
இனைந்த தேவருக்கு அமிர்தினை ஈக' என ஏக
வனைந்த மேனிமான் மாயையால் அவுணரை மாய்த்தான்

(4)
இந்நிகழ்வின் அடையாளமாய் அம்பிகை பாகத்து இறைவர், கூர்ம மூர்த்தியின் ஓட்டினைத் தன் திருமார்பில் அணிகலனாக அணிந்தருள்கின்றார்,

(கந்தபுராணம் - தக்ஷ காண்டம் - ததீசி உத்தரப் படலம் - திருப்பாடல் 28) 
மாய்த்து வானவர்க்கு அமுதினை நல்கினன் வையம் 
காத்த கண்ணன் என்றுரைப்பரால், அவனுறு கமடம்
மீத்தயங்கிய காப்பினை வாங்கியே விமலன்
சாத்தினான் முனம் அணிந்திடு மருப்புடன் சார

இனி முக்கண் முதல்வர் ஆமையோட்டினை அணிவதற்கான தேவாரக் குறிப்புகளைக் காண்போம்,

(1)
(சம்பந்தர் தேவாரம் - திருக்கொடிமாடச்செங்குன்றூர் - 'வெந்த வெண்ணீறணிந்து' எனும் திருப்பதிகம் - திருப்பாடல் 5)
பொன்திகழ் ஆமையொடு புரிநூல் திகழ்மார்பில்  

(2)
(அப்பர் தேவாரம் - திருமறைக்காடு - 'தேரையும் மேல் கடாவி' எனும் திருப்பதிகம் - திருப்பாடல் 2)
அக்கரவு ஆமை பூண்ட அழகனார்

(3)
(சுந்தரர் தேவாரம் - திருநனிபள்ளி - 'ஆதியன் ஆதிரையன்' எனும் திருப்பதிகம் - திருப்பாடல் 9)
ஏன மருப்பினொடும் எழில்ஆமையும் பூண்டுகந்து