பன்னிரு சைவத் திருமுறைகளும் திருமுறை ஆசிரியர்களும்:

சைவத் திருமுறைகள் பன்னிரண்டுள், முதல் 11 திருமுறைகள் வரை தொகுக்கப் பெற்ற காலம் 11ஆம் நூற்றாண்டு, தொகுத்தருளியவர் திருநாரையூரில் தோன்றிய 'நம்பியாண்டார் நம்பிகள்' எனும் அருளாளராவார்.

பின்னர் 12ஆம் நூற்றாண்டில் தெய்வச் சேக்கிழார் அருளிச் செய்த 'பெரிய புராணம்' எனும் 'திருத்தொண்டர் புராணம்' 12ஆம் திருமுறையாகச் சேர்க்கப் பெறுகின்றது.

இப்பன்னிரு திருமுறைகளையும் அருளிச் செய்தோர் மொத்தம் 27 அருளாளர்கள், 27 நட்சத்திரங்களைப் போன்று சைவ வானில் ஒளிர்பவர்கள்.

1, 2, 3 திருமுறைகள் (தேவாரம்):

திருஞானசம்பந்தர் அருளியவை.

4, 5, 6 திருமுறைகள் (தேவாரம்):

நாவுக்கரசு சுவாமிகள் (அப்பர் அடிகள்) அருளியவை.

7ஆம் திருமுறை (தேவாரம்):

சுந்தரமூர்த்தி நாயனார் அருளியது.

8ஆம் திருமுறை (திருவாசகம், திருக்கோவையார்):

மாணிக்கவாசகர் அருளியவை.

9ஆம் திருமுறை (திருவிசைப்பா, திருப்பல்லாண்டு):

இதன் திருப்பாடல்களை அருளிச் செய்துள்ளோர் மொத்தம் 9 அருளாளர்கள்.

1.திருமாளிகைத் தேவர்
2.சேந்தனார்
3.கருவூர்த்தேவர்
4.பூந்துருத்தி நம்பி
5.கண்டராதித்தர்
6.வேணாட்டடிகள்
7.திருவாலியமுதனார்
8.புருடோத்தம நம்பி
9.சேதிராயர்

இவற்றுள் திருப்பல்லாண்டினைச் சேந்தனாரின் திருப்பாடல்களும், 'திருவிசைப்பா' எனும் தொகுப்பில்  சேந்தனார் உள்ளிட்ட 9 ஆசிரியர்களின் திருப்பாடல்களும் இடம்பெறுகின்றன. 

10ஆம் திருமுறை (திருமந்திரம்):

திருமூலர் அருளியது.

11ஆம் திருமுறை (பொதுப் பாடல்களின் தொகுப்பு):

இதனை அருளிச் செய்துள்ளார் மொத்தம் 12 ஆசிரியர்கள்.

1. திருஆலவாய் உடையார்
2. காரைக்கால் அம்மையார்
3. ஐயடிகள் காடவர்கோன்
4. சேரமான் பெருமாள்
5. நக்கீரதேவர்
6. கல்லாடதேவர்
7. கபிலதேவர்
8. பரணதேவர்
9. இளம்பெருமான் அடிகள்
10. அதிரா அடிகள்
11. பட்டினத்துப் பிள்ளையார்
12. நம்பியாண்டார் நம்பிகள்

12ஆம் திருமுறை (பெரிய புராணம்):

சேக்கிழார் பெருமான் அருளியது.

திருமுறை ஆசிரியர்களின் பாராயணத் துதி:

திருஞானசம்பந்தர் வாகீசர் சுந்தரர்
திருவாதவூரர் மற்றைத்
திருமாளிகைத் தேவர் சேந்தனார் கருவூரர்
தெள்ளுபூந்துருத்தி நம்பி
வருஞான கண்டராதித்தர் வேணாட்டடிகள்
வாய்ந்த திருவாலியமுதர்
மருவு புருடோத்தமர் சேதிராயர் மூலர்
மன்னு திருஆலவாயர்
ஒரு காரைக்காலம்மை ஐயடிகள் சேரமான்
ஒளிர்கீரர் கல்லாடனார்
ஒண் கபிலர் பரணர் மெய்உணர் இளம்பெருமானோடு
ஓங்கும் அதிராஅடிகளார்
திருமேவு பட்டினத்(து) அடிகளொடு
நம்பியாண்டார் நம்பி சேக்கிழாரும்
சிவநெறித் திருமுறைகள் பன்னிரண்டு அருள்செய்த
தெய்விகத் தன்மையோரே.

திருமூலர் தோன்றிய காலம் என்ன? (ஆதார பூர்வ விளக்கங்கள்):

திருமூலர் 63 நாயன்மார்களுள் ஒருவராகப் போற்றப் பெறுபவர் என்பதும், பன்னிரு சைவத் திருமுறைகளுள் 10ஆம் திருமுறையான திருமந்திரத்தின் ஆசிரியர் என்பதும் அனைவரும் அறிந்ததே. இனி திருமூலர் தோன்றிய காலம் குறித்து இப்பதிவினில் சிந்தித்துத் தெளிவுறுவோம்.

7ஆம் நூற்றாண்டின் இறுதியில் அவதரித்த சுந்தர மூர்த்தி நாயனார் தமது திருத்தொண்டர் தொகையில் 'நம்பிரான் திருமூலன் அடியார்க்கும் அடியேன்' என்று போற்றுகின்றார். ஆதலின் திருமூல நாயனார் 7ஆம் நூற்றாண்டிற்கு முன் தோன்றிய அருளாளர் எனும் முடிவிற்கு எளிதாக வந்து விடலாம்.

இனி பெரிய புராணத்தில், 'திருமூல தேவ நாயனார்' பகுதியில் இடம்பெறும் பின்வரும் இரு திருப்பாடல்களில், திருமூலரின் அவதார காலக் குறிப்புகளைக் காண்போம்,

திருமூலர் ஆண்டொன்றிற்கு ஒரு திருப்பாடல் வீதம் '3000 திருப்பாடல்களைக் கொண்ட திருமந்திரத் தொகுப்பினை நிறைவு செய்துள்ளார்' என்று தெய்வச் சேக்கிழார் பின்வரும் திருப்பாடலில் பதிவு செய்கின்றார்,

(பெரிய புராணம்: திருமூல தேவ நாயனார் புராணம்: திருப்பாடல் 26):
ஊனுடம்பில் பிறவிவிடம் தீர்ந்துலகத்தோர் உய்ய
ஞானமுதல் நான்குமலர் நல் திருமந்திரமாலை
பான்மைமுறை ஓராண்டுக்கொன்றாகப் பரம்பொருளாம்
ஏன எயிறணிந்தாரை ஒன்றவன் தானென எடுத்து!!!

'திருமூல நாயனார் இப்புவியில் 3000 ஆண்டுகள் வாழ்ந்திருந்து, 3000 தமிழ்ப் பாமாலைகள் புனைந்துப் பின்னர் சிவமுத்திப் பதம் பெற்றுத் திருக்கயிலை ஏகினார்' என்று பின்வரும் திருப்பாடலில் ஐயத்திற்கு இடமின்றி மற்றொரு முறை பதிவு செய்கின்றார் சேக்கிழார் அடிகள்,

(பெரிய புராணம்: திருமூல தேவ நாயனார் புராணம்: திருப்பாடல் 27):
முன்னியஅப் பொருள்மாலைத் தமிழ்மூவாயிரம் சாத்தி
மன்னிய மூவாயிரத்தாண்டு இப்புவிமேல் மகிழ்ந்திருந்து
சென்னி மதியணிந்தார் தம் திருவருளால் திருக்கயிலை
தன்னில்அணைந்து ஒருகாலும் பிரியாமைத் தாளடைந்தார்.

ஆதலின் திருமூல நாயனார் இன்றிலிருந்து சுமார் 5000 ஆண்டுகளுக்கு முன்னரே (அதாவது தற்பொழுது நடந்தேறி வரும் கலியுகத்தின் துவக்க கால கட்டத்திலேயே) தோன்றியுள்ளார்' என்பது தெளிவு.