திருமூலர் தோன்றிய காலம் என்ன? (ஆதார பூர்வ விளக்கங்கள்):

திருமூலர் 63 நாயன்மார்களுள் ஒருவராகப் போற்றப் பெறுபவர் என்பதும், பன்னிரு சைவத் திருமுறைகளுள் 10ஆம் திருமுறையான திருமந்திரத்தின் ஆசிரியர் என்பதும் அனைவரும் அறிந்ததே. இனி திருமூலர் தோன்றிய காலம் குறித்து இப்பதிவினில் சிந்தித்துத் தெளிவுறுவோம்.

7ஆம் நூற்றாண்டின் இறுதியில் அவதரித்த சுந்தர மூர்த்தி நாயனார் தமது திருத்தொண்டர் தொகையில் 'நம்பிரான் திருமூலன் அடியார்க்கும் அடியேன்' என்று போற்றுகின்றார். ஆதலின் திருமூல நாயனார் 7ஆம் நூற்றாண்டிற்கு முன் தோன்றிய அருளாளர் எனும் முடிவிற்கு எளிதாக வந்து விடலாம்.

இனி பெரிய புராணத்தில், 'திருமூல தேவ நாயனார்' பகுதியில் இடம்பெறும் பின்வரும் இரு திருப்பாடல்களில், திருமூலரின் அவதார காலக் குறிப்புகளைக் காண்போம்,

திருமூலர் ஆண்டொன்றிற்கு ஒரு திருப்பாடல் வீதம் '3000 திருப்பாடல்களைக் கொண்ட திருமந்திரத் தொகுப்பினை நிறைவு செய்துள்ளார்' என்று தெய்வச் சேக்கிழார் பின்வரும் திருப்பாடலில் பதிவு செய்கின்றார்,

(பெரிய புராணம்: திருமூல தேவ நாயனார் புராணம்: திருப்பாடல் 26):
ஊனுடம்பில் பிறவிவிடம் தீர்ந்துலகத்தோர் உய்ய
ஞானமுதல் நான்குமலர் நல் திருமந்திரமாலை
பான்மைமுறை ஓராண்டுக்கொன்றாகப் பரம்பொருளாம்
ஏன எயிறணிந்தாரை ஒன்றவன் தானென எடுத்து!!!

'திருமூல நாயனார் இப்புவியில் 3000 ஆண்டுகள் வாழ்ந்திருந்து, 3000 தமிழ்ப் பாமாலைகள் புனைந்துப் பின்னர் சிவமுத்திப் பதம் பெற்றுத் திருக்கயிலை ஏகினார்' என்று பின்வரும் திருப்பாடலில் ஐயத்திற்கு இடமின்றி மற்றொரு முறை பதிவு செய்கின்றார் சேக்கிழார் அடிகள்,

(பெரிய புராணம்: திருமூல தேவ நாயனார் புராணம்: திருப்பாடல் 27):
முன்னியஅப் பொருள்மாலைத் தமிழ்மூவாயிரம் சாத்தி
மன்னிய மூவாயிரத்தாண்டு இப்புவிமேல் மகிழ்ந்திருந்து
சென்னி மதியணிந்தார் தம் திருவருளால் திருக்கயிலை
தன்னில்அணைந்து ஒருகாலும் பிரியாமைத் தாளடைந்தார்.

ஆதலின் திருமூல நாயனார் இன்றிலிருந்து சுமார் 5000 ஆண்டுகளுக்கு முன்னரே (அதாவது தற்பொழுது நடந்தேறி வரும் கலியுகத்தின் துவக்க கால கட்டத்திலேயே) தோன்றியுள்ளார்' என்பது தெளிவு. 

No comments:

Post a Comment