இளம் பிராய நிகழ்வுகளை முதற்கண் நினைவு கூர்ந்துப் பின்னர் தன் தமக்கையாரின் தவமேன்மைச் சிறப்பினால் 'சிவமூர்த்தியின் திருவருளுக்கு தான் உரியரான நிகழ்வினை' இத்திருப்பாடலில் பதிவு செய்து போற்றுகின்றார் திருத்தாண்டக வேந்தர்,
('கொக்கரை குழல்' என்று துவங்கும் ஆரூர் திருப்பதிகம் - திருப்பாடல் 6)
எம்மையார்இலை யானும் உளேன்அலேன்
எம்மையாரும் இதுசெய வல்லரே
அம்மை யார் எனக்கென்(று) அரற்றினேற்(கு)
அம்மையாரைத் தந்தார் ஆரூர் ஐயரே!!!
(பொருள்)
இளம் பிராயத்திலேயே தாய்; தந்தையரை இழந்தேன், சிறு வயதினன் ஆதலின் இவ்வுலக வாழ்வைத் தனித்து எதிர்கொள்ளும் திறமின்றி இருந்தனன். எம் தமக்கையார் யாவுமாய் விளங்கி எம்மைக் காத்தருள வல்லவரே, எனினும் அவரும் இச்சமயம் 'தன் இன்னுயிர் துறப்பேன்' என்று துணிந்துள்ளார் (நிச்சயிக்கப் பெற்ற மணமகன் இறந்துபட்ட காரணத்தால்).
'இனி அம்மையப்பராய் இருந்து எம்மைக் காப்பார் யாருளர்? என்று கதியற்றுப் பதறியிருந்த நேரத்தில், பின்னாளில் எம்மைப் புறச்சமய நெறியினின்றும் நீக்கிச் சிவமாம் மெய்நெறிக்கு ஆட்படுத்த வேண்டியிருந்த காரணத்தால், திலகவதியாரைத் துறவு நெறியில் செலுத்தி, தாய்;தந்தை; குரு என்று யாவுமாய் விளங்குமாறு மீண்டும் அப்பிராட்டியாரை எமக்கு அளித்தருளினார் ஆரூர் இறையவர்' என்று போற்றுகின்றார் நம் அப்பர் சுவாமிகள்.
எண்ணுந்தோறும் எண்ணுந்தோறும் நெகிழ்விக்கும் திருப்பாடல் வரிகள் இவை. ஆழிமிசைக் கல்மிதப்பில் அணைந்த பிரான் அடி போற்றி!!!
No comments:
Post a Comment