சிவபரம்பொருளின் திருமேனியில் திருமால் இடபாகம் பெற்றது எவ்வாறு?

உலகீன்ற நம் உமையன்னை அரியபெரிய தவமிருந்து சிவமாம் பரம்பொருளின் திருமேனியில் இடபாகம் பெற்ற நிகழ்வினைப் புராணங்கள் பிரசித்தமாகப் பறைசாற்றுகின்றன. எனினும் முக்கண் முதல்வர் 'எதன் பொருட்டு மறிகடல் வண்ணரான ஸ்ரீமகாவிஷ்ணுவிற்கு தன் திருமேனி பாகத்தினை நல்கியருளினார்?' என்பது அரிய குறிப்பாகவே விளங்கி வருகின்றது. இனி இப்பதவில் அது குறித்துச் சிந்தித்துத் தெளிவுறுவோம்,

முதற்கண் சிவமூர்த்தியின் 'சங்கர நாராயண' திருவடிவிற்கான தேவார மூவரின் திருப்பாடல் குறிப்புகளைக் காண்போம்,

'மண்ணுமோர் பாகமுடையார் மாலுமோர் பாகமுடையார்' என்பது ஞானசம்பந்தப் பெருமானாரின் திருவாக்கு (திருப்பெரும்புலியூர் தேவாரம் -திருப்பாடல் 1)

'சீரேறு திருமாலோர் பாகத்தான் காண்' என்று நம் அப்பர் சுவாமிகள் குறிக்கின்றார் ('கைம்மான மதக்களிற்றின்' எனும் திருவாரூர் தேவாரம் - திருப்பாடல் 5)

'திருமாமகள் கோன் திருமாலோர் கூறன்' என்று நம்பிகள் பெருமானார் பதிவு செய்கின்றார் ('முந்தையூர்' எனும் திருஇடையாறு தேவாரம் - திருப்பாடல் 9)

இனி இப்பதிவு முன்னிறுத்தும் கேள்விக்கான விடையினை அறிய திருமந்திரத்திற்குள் பயணிப்போம்,

(1)
ஆதிமுதற் பொருளான சிவமூர்த்தி, திருமாலின் பூசனையால் திருவுள்ளம் மகிழ்ந்து, காத்தற் தொழிலை சிறந்து மேற்கொள்ளும் பொருட்டு சக்கரமொன்றினை அளித்தருள்கின்றார். அதீத சக்தி பொருந்திய அதனைத் தரிக்கஒண்ணாமையால் திருமால் சிவபெருமானை மீண்டுமொரு முறை அர்ச்சித்துப் போற்றி விண்ணப்பிக்க, சிவமூர்த்தி வைகுந்த வாசருக்குத் தன் சக்தியினில் ஒன்றைக் கூறிட்டுக் கொடுத்துப் பேரருள் புரிகின்றார்,

(சக்கரப் பேறு - திருமந்திரம் - இரண்டாம் தந்திரம் - திருப்பாடல் 2)
சக்கரம் பெற்றுநல் தாமோதரன் தானும்
சக்கரம் தன்னைத் தரிக்க ஒண்ணாமையால்
மிக்கஅரன் தன்னை விருப்புடன் அற்சிக்கத்
தக்கநற் சத்தியைத் தான்கூறு செய்ததே

(2)
தன் சக்தியைக் கூறிட்டுக் கொடுத்து, ஸ்ரீமன் நாராயணர் அதனை முழுவதுமாய் கிரகித்துக் கொள்ள, தன் திருமேனியின் பாகமொன்றினையும் கூறிட்டுக் கொடுத்து அருள் புரிகின்றார்,

(சக்கரப் பேறு - திருமந்திரம் - இரண்டாம் தந்திரம் - திருப்பாடல் 3)
கூறதுவாகக் குறித்த நற்சக்கரம்
கூறது செய்து கொடுத்தனன் மாலுக்குக்
கூறது செய்து கொடுத்தனன் சத்திக்குக்
கூறது செய்து தரித்தனன் கோலமே

No comments:

Post a Comment