ஸ்ரீவாமன மூர்த்தி வழிபட்ட இரு சிவத்தலங்கள்:

வைகுந்த வாசரான ஸ்ரீமகாவிஷ்ணுவின் வாமன அவதார நிகழ்வுகள் எண்ணிறந்த தேவாரத் திருப்பதிகங்களில் குறிக்கப் பெற்றுள்ளன.

(1)
(ஸ்ரீவாமன மூர்த்தி மகாபலிச் சக்கரவர்த்தியிடம் மூவடி மண் தானமாகக் கேட்ட நிகழ்வு):

மண் தனை இரந்து கொண்ட மாயன் ('மனைவிதாய்' எனும் திருநாகைக்காரோண அப்பர் தேவாரம் - 4ஆம் திருப்பாடல்)

மாவலி பால்  காணிக்கு இரந்தவன் ('மாணிக்கு உயிர் பெற' எனும் திருமாற்பேறு அப்பர் தேவாரம் - 1ஆம் திருப்பாடல்)

(2)
(ஸ்ரீவாமன மூர்த்தி விண்ணையும் மண்ணையும் ஈரடியால் அளந்தருளிய நிகழ்வு)

மண்ணளந்த மணிவண்ணர் (திருவலம்புரம் - அப்பர் தேவாரம் - 7ஆம் திருப்பாடல்)

பாலனாகி உலகளந்த படியானும் ('நல்லான் காண்' எனும் திருவலிவல அப்பர் தேவாரம் - 10ஆம் திருப்பாடல்)

மண்ணினைத் தாவ நீண்ட மாலினுக்கு அருளும் வைத்தார் ('நங்கையைப் பாகம் வைத்தார்' எனும் திருக்கழிப்பாலை அப்பர் தேவாரம் - 2ஆம் திருப்பாடல்)

இனி இப்பதிவில் ஸ்ரீவாமன மூர்த்தி வழிபட்ட இரு சிவத்தலங்கள் பற்றிய அகச் சான்றுகளைக் காண்போம், 

(1)
திருமாணிகுழியில், நியமத்துடன் ஸ்ரீவாமன மூர்த்தி வழிபாடு செய்த நிகழ்வினைப் பின்வரும் திருப்பாடலில் சம்பந்தப் பெருமானார் பதிவு செய்கின்றார்,

(திருமாணிகுழி - 'பொன்னியல்' எனும் சம்பந்தர் தேவாரம் - திருப்பாடல் 4)
நித்த நியமத் தொழிலனாகி நெடுமால் குறளனாகி மிகவும்
சித்தமதொருக்கி வழிபாடு செயநின்ற சிவலோகன் இடமாம்
கொத்தலர் மலர்ப்பொழிலின் நீடுகுல மஞ்ஞை நடமாடல் அதுகண்டு 
ஒத்தவரி வண்டுகள் உலாவி இசைபாடுதவி மாணிகுழியே

(2)
பின்வரும் திருப்பாடலில், உலகையளந்த ஸ்ரீவாமன மூர்த்தி திருக்கண்ணார்கோயிலில் சிவலிங்கத் திருமேனியைப் பிரதிஷ்டை செய்து வழிபட்ட நிகழவினை ஞானசம்பந்த மூர்த்தி பதிவு செய்கின்றார். 'தற்குறி' எனும் பதம், சிவபரம்பொருளின் அடையாளமான சிவலிங்கத் திருமேனியைக் குறிக்க வந்தது).

('தண்ணார் திங்கள்' எனும் திருக்கண்ணார்கோயில் - சம்பந்தர் தேவாரம் - திருப்பாடல் 5)
மறுமாண் உருவாய் மற்றிணையின்றி வானோரைச்
செறு மாவலிபால் சென்று உலகெல்லாம் அளவிட்ட
குறுமாண் உருவன் தற்குறியாகக் கொண்டாடும்
கறுமா கண்டன் மேயது கண்ணார் கோயிலே

No comments:

Post a Comment