சிவபெருமான் பன்றிக் கொம்பினைத் திருமார்பில் அணிந்திருப்பது எதனால்?

(1)
இரண்யாட்சன் எனும் அசுரன், நமது அண்டத்திலுள்ள 14 உலகங்களுள் ஒன்றான இப்பூமியினைக் கவர்ந்து கொண்டு, பூமிக்கு அடியிலுள்ள இறுதி உலகமான பாதாள லோகத்திற்குச் சென்று விடுகின்றான். ஸ்ரீமன் நாராயணர் பிரமனின் நாசியிலிருந்து வராக ரூபியாய் வெளிப்பட்டுத் தோன்றுகின்றார். மேருமலை போன்று நெடிதுயர்ந்த மகா வராக வடிவினராகி, இரண்யாட்சயனை சம்ஹாரம் புரிந்து, நிலவுலகினை மீண்டும் அதன் முந்தைய இடத்தில் நிலைநிறுத்திக் காக்கின்றார். இதன் பின்னர் வராக மூர்த்தி தன்னிலை இழக்கும் சூழலொன்று உருவாகின்றது,

(கந்தபுராணம் - தக்ஷ காண்டம் - ததீசி உத்தரப் படலம் - திருப்பாடல் 18) 
ஓரிமைக்கு முன் பாதலம் தன்னில் மால் உற்றுக்
கூரெயிற்றினால் பாய்ந்து பொற்கண்ணனைக் கொன்று
பாரினைக்கொடு மீண்டுமுன் போலவே பதித்து
வீரமுற்றனன் தன்னையே மதித்தனன் மிகவும்
-
(மச்ச; கூர்ம; வராக; நரசிம்ம அவதாரங்கள் ஒவ்வொன்றிலும், இது போன்றதொரு தன்னிலை இழக்கும் நிகழ்வு குறிக்கப் பெற்றுள்ளது. இதன் காரணத்தை விளக்கும் புராணக் குறிப்பொன்றினைப் பிறிதொரு சமயம் சிந்திக்கலாம்). 

(2)
வராக மூர்த்தி பூமிக்கும் அதனைச் சூழ்ந்துள்ள கடற்பரப்பிற்கும் பெரும் அழிவினை உருவாக்க  முனைய, நீலகண்டப் பரம்பொருளான சிவபெருமான் அங்கு எழுந்தருளி வருகின்றார்,

(கந்தபுராணம் - தக்ஷ காண்டம் - ததீசி உத்தரப் படலம் - திருப்பாடல் 19) 
மாலும் அப்பகல் அகந்தையாய் உணர்வின்றி மருப்பால்
ஞாலம் யாவையும் அழிதர இடந்தவை நனிசூழ்
வேலை தன்னையும் உடைத்தனன் அன்னதோர் வேலை
ஆலமார் களத்து அண்ணல்கண்டு எய்தினான் அங்கண்

(3)
கண்ணுதற் கடவுளான சிவமூர்த்தி அவ்வராகத்தின் கொம்புகளுள் ஒன்றினைப் பறிக்கின்றார், இச்செயலால் தன்னிலை பெறும் ஆதிவராக மூர்த்தி சிவபரம்பொருளைப் பணிந்தேத்த, ஆலமுண்ட அண்ணலாரும் அவ்விடத்தினின்றும் மறைந்தருள்கின்றார்,

(கந்தபுராணம் - தக்ஷ காண்டம் - ததீசி உத்தரப் படலம் - திருப்பாடல் 20) 
கண்டு கண்ணுதல் அவன் மருப்பொன்றினைக் கரத்தால்
கொண்டு வல்லையில் பறித்தலும், உணர்வுமுன் குறுக
விண்டு மற்றதும் பறிப்பன் இங்கிவன்என வெருவிப்
பண்டு போல நின்றேத்தலும் போயினன் பரமன்

(4)
அன்று முதல் அம்பிகை பாகத்து அண்ணல், நடந்தேறிய இந்நிகழ்விற்கான அடையாளமாய், அப்பன்றிக் கொம்பினைத் தன் திருமார்பினில் அணிந்தவாறு திருக்காட்சி தருகின்றார்,

(கந்தபுராணம் - தக்ஷ காண்டம் - ததீசி உத்தரப் படலம் - திருப்பாடல் 21) 
அன்று கொண்டதோர் மருப்பினைச் சின்னமா அணிந்தான்
இன்றும் அங்கவன் மார்பிடைப் பிறையென இலங்கும்
ஒன்று மற்றிது கேட்டனை நின்றதும் உரைப்பாம்
நன்று தேர்ந்துணர் மறைகளும் இத்திறம் நவிலும்

இனி உமையொரு பாகனார் 'ஏனம்' எனும் பன்றிக் கொம்பினை அணிவதற்கான தேவாரக் குறிப்புகளைக் காண்போம்,

(1)
(சம்பந்தர் தேவாரம் - திருப்பேணுபெருந்துறை - திருப்பாடல் 1)
பைம்மா நாகம் பன்மலர் கொன்றை பன்றி வெண்கொம்பொன்று பூண்டு

(2)
(அப்பர் தேவாரம் - தில்லை - 'பாளையுடை' எனும் திருப்பதிகம் - திருப்பாடல் 6)
வானத்தவர்உய்ய வன்னஞ்சை உண்ட கண்டத்திலங்கும்
ஏனத்துஎயிறு கண்டால் பின்னைக் கண்கொண்டு காண்பதென்னே

(3)
(சுந்தரர் தேவாரம் - திருக்கேதீஸ்வரம் - 'நத்தார்படை' எனும் திருப்பதிகம் - திருப்பாடல் 7)
ஏனத்து எயிறணிந்தான் திருக்கேதீச்சரத்தானே

No comments:

Post a Comment