திருமகள் வழிபட்ட சிவத்தலங்கள் மற்றும் அன்னை ஸ்ரீமகாலக்ஷ்மி தொடர்பான அரிய திருமுறைக் குறிப்புகள்:

வைகுந்த வாசனாரின் திருமார்பில் எழுந்தருளியிருக்கும் அன்னை ஸ்ரீமகாலக்ஷ்மியை 'செய்ய மாது; செய்யவள், செய்யாள், திருமகள்; திருமங்கை; திருவினாள்; பூமகள்' என்று தேவாரப் பனுவல்கள் சிறப்பிக்கின்றன. 

(1)
அன்னை ஸ்ரீமகாலக்ஷ்மி பல்வேறு சிவத்தலங்களில் வழிபட்டுள்ள நிகழ்வுகளைத் தலபுராணங்கள் நமக்கு அறிவிக்கின்றன. 'செய்யாள் வழிபட நின்றார் தாமே' என்று பின்வரும் திருவாலங்காட்டுத் திருப்பாடலில் நம் அப்பர் சுவாமிகள் பதிவு செய்கின்றார்,

(திருவலாலங்காடு - 'ஒன்றா உலகனைத்தும்' எனும் திருப்பதிகம் - திருப்பாடல் 7)
மையாரும் கண்ட மிடற்றார் தாமே
    மயானத்தில் ஆடல் மகிழ்ந்தார் தாமே
ஐயாறும் ஆரூரூம் ஆனைக்காவும்
    அம்பலமும் கோயிலாக் கொண்டார் தாமே
பையாடரவம் அசைத்தார் தாமே
    பழனை பதியா உடையார் தாமே
செய்யாள் வழிபட நின்றார் தாமே
    திருவாலங்காடுறையும் செல்வர் தாமே

(2)
அன்னை ஸ்ரீமகாலக்ஷ்மி திருவாரூரில் அரியபெரிய தவம் புரிந்து, அனைத்து செல்வங்களையும், முடிவிலா மங்கலங்களையும், ஆரூருறைப் பரம்பொருளான சிவபெருமானின் திருவருளால் பெற்ற நிகழ்வினைப் பின்வரும் திருப்பாடலில் கச்சியப்ப சிவாச்சாரியார் பதிவு செய்கின்றார் ('மலர்மென் பாவை' என்பது திருமகளாரைக் குறிக்க வந்தது),

(கந்த புராணம் - உற்பத்தி காண்டம் - குமாரபுரிப் படலம் - திருப்பாடல் 81)
எழில்வளம் சுரக்கும் தொல்லை இலஞ்சியம் கானம் நோக்கி
மழவிடை இறைவன் பொற்றாள் வணங்கியே,மலர்மென் பாவை
முழுதுள திருவும் என்றும் முடிவில் மங்கலமும் எய்த
விழுமிதின் நோற்றுப் பெற்ற வியன் திருவாரூர் கண்டான்

(3)
'திருமகட்குச் செந்தாமரையாம் அடி' என்பது நம் அப்பர் சுவாமிகளின் அற்புதத் திருவாக்கு. 'அம்பிகை பாகத்து அண்ணலாரின் திருவடி நிலைகள் செந்தாமரைகள் ஆதலின் அன்னை ஸ்ரீமகாலக்ஷ்மி அங்கு சிறப்புடன் எழுந்தருளி இருக்கின்றாள்' என்பது இதன் உட்கருத்து. 

(திருவதிகை - 'அரவணையான் சிந்தித்து' எனும் திருப்பதிகம் - திருப்பாடல் 6)
திருமகட்குச் செந்தாமரையாம் அடி
    சிறந்தவர்க்குத் தேனாய் விளைக்கும்அடி
பொருளவர்க்குப் பொன்னுரையாய் நின்றஅடி
    புகழ்வார் புகழ்தகைய வல்லஅடி
உருவிரண்டும் ஒன்றோடொன்று ஒவ்வாஅடி
    உருவென்று உணரப்படாத அடி
திருவதிகைத் தென்கெடில நாடன்அடி
    திருவீரட்டானத்தெம் செல்வன்அடி

(4)
வெவ்வேறு யுக கால கட்டங்களில், ஸ்ரீமன் நாராயணர் அன்னை ஸ்ரீமகாலக்ஷ்மியைப் பிரிய நேரிட்ட சமயங்களில், சிவழிபாடு புரிந்து; சிவபரம்பொருளின் திருவருளாலேயே மீண்டும் இணையப் பெற்றுள்ள நிகழ்வுகளைப் புராணங்கள் விவரிக்கின்றன. பின்வரும் சிவபுரத் திருப்பாடலில் 'செய்யவளை மாலுக்கு ஈந்த சிவனவன் காண்' என்று நம் அப்பர் சுவாமிகள் பதிவு செய்கின்றார்,

(திருசிவப்புரம் - 'வானவன் காண்' எனும் திருப்பதிகம் - திருப்பாடல் 7)
வெய்யவன் காண்; வெய்ய கனலேந்தினான் காண்
    வியன்கெடில வீரட்டம் மேவினான் காண்
மெய்யவன் காண்; பொய்யர்மனம் விரவாதான் காண்
    வீணையோடிசைந்து மிகு பாடல் மிக்க
கையவன் காண்; கையில் மழுவேந்தினான் காண்
    காமனங்கம் பொடிவிழித்த கண்ணினான் காண்
செய்யவன் காண்; செய்யவளை மாலுக்கீந்த
    சிவனவன் காண், சிவபுரத்தெம் செல்வன் தானே

No comments:

Post a Comment