ஸ்ரீராமச்சந்திர மூர்த்தி வழிபாடு செய்த சிவத்தலங்கள்:

தசரத திருக்குமாரரான ஸ்ரீராமச்சந்திர மூர்த்தி தமிழகப் பகுதிகளிலுள்ள பல்வேறு சிவாலயங்களைத் தரிசித்து வழிபாடு புரிந்துள்ள நிகழ்வுகளை எண்ணிறந்த தலபுராண; திருமுறைக் குறிப்புகள் நமக்குப் பறைசாற்றுகின்றன. இனி இப்பதிவில் கொண்டல் வண்ணரான ஸ்ரீராமர் மூன்று தலங்களில் சிவபரம்பொருளை வழிபட்டதற்கான தேவாரக் குறிப்புகளைக் காண்போம்,

(1)
திருவாரூர் மாவட்டத்திலுள்ள, 'திருஉசாத்தானம்' எனும் காவிரித் தென்கரைத் தலத்தில், ஸ்ரீராமர்; அவர்தம் இளவலான இலக்குவன், ஜாம்பவான், சுக்ரீவன்; அனுமன் ஆகியோர் வழிபட்டுள்ள நிகழ்வினை நம் ஞானசம்பந்தப் பெருமானார் பதிவு செய்கின்றார்,

(திருஉசாத்தானம் - 'நீரிடை' எனும் ஞானசம்பந்தர் தேவாரம் - திருப்பாடல் 1)
நீரிடைத் துயின்றவன்; தம்பி; நீள் சாம்புவான்
போருடைச் சுக்கிரீவன்; அநுமான் தொழக்
காருடை நஞ்சுண்டு காத்தருள் செய்தஎம்
சீருடைச் சேடர்வாழ் திருஉசாத்தானமே

(2)
விழுப்புரம் மாவட்டத்திலுள்ள, 'திருஆமாத்தூர்' எனும் நடுநாட்டுத் தலத்தில், ஸ்ரீராமர் வழிபட்டுள்ள குறிப்பினை நம் அப்பர் சுவாமிகள் 'இராமனும் வழிபாடு செய் ஈசனை' என்று குறிக்கின்றார், 

(திருஆமாத்தூர் - 'மாமாத்தாகிய' எனும் அப்பர் தேவாரம் - திருப்பாடல் 5)
குராமன்னும் குழலாள் ஒரு கூறனார்
அராமன்னும் சடையான் திருஆமாத்தூர்
இராமனும் வழிபாடு செய் ஈசனை
நிராமயன் தனை நாளும் நினைமினே

(3)
கடலூர் மாவட்டத்திலுள்ள, 'திருநாரையூர்' எனும் காவிரி வடகரைத் தலத்தில், ஸ்ரீராமர் வழிபாடு செய்துள்ள நிகழ்வினைக் 'கழுகினொடு காகுத்தன் கருதிஏத்தும் நம்பனை' என்று நம் அப்பர் சுவாமிகள் போற்றுகின்றார் (கழுகு என்பது 'சடாயு; சம்பாதியையும், 'காகுத்தன்' எனும் திருப்பெயர் 'ஸ்ரீராமச்சந்திர மூர்த்தியையும் குறிக்க வந்தது).

(திருநாரையூர் - 'சொல்லானை' எனும் அப்பர் தேவாரம் - திருப்பாடல் 4)
செம்பொன்னை; நன்பவளம் திகழும் முத்தைச்
    செழுமணியைத், தொழுமவர்தம் சித்தத்தானை
வம்பவிழும் மலர்க்கணை வேள் உலக்க நோக்கி
    மகிழ்ந்தானை. மதிற்கச்சி மன்னுகின்ற
கம்பனை,எம் கயிலாய மலையான் தன்னைக்
    கழுகினொடு காகுத்தன் கருதிஏத்தும்
நம்பனை,எம் பெருமானை, நாதன் தன்னை
    நாரையூர் நன்னகரில் கண்டேன் நானே

(காகுத்தன் எனும் திருநாமம் தோன்றிய காரணம்): 
சித்திரகூடத்தில் ஸ்ரீராமர் அன்னை ஸ்ரீஜானகியின் திருமடியில் தலை வைத்து துயில் புரிந்திருக்க, காக வடிவில் அங்கு வரும் இந்திரனின் மகனான ஜெயந்தன் அன்னையின் திருமார்பினைத் தீண்ட முனைகின்றான். 

ஸ்ரீராமர் வெகுண்டு, அங்கிருந்த சிறு புல்லொன்றினையே அஸ்திரமாக அதன் மீது ஏவ, எண்ணிறந்த உலகங்களுக்கு ஓடோடிச் சென்று கதறியும் எவரொருவரும் அபயம் அளிக்க முன்வராமையினால், மீண்டும் ஸ்ரீராமரின் திருவடிகளிலேயே சென்று தஞ்சமடைகின்றான். 

கோசலை மைந்தன் ஜெயந்தனாகிய காகத்தின் ஒரு கண் பார்வையினை மட்டும் அப்புல்லினால் குத்தி நீக்கி, பிழை பொறுத்தருள்கின்றார்.

No comments:

Post a Comment