ரிக் வேதத்தைப் போற்றும் நாவுக்கரசு சுவாமிகள் (அப்பர் தேவார நுட்பங்கள் - பகுதி 3)

சைவம் உள்ளிட்ட அறுவகைச் சமயங்களுக்கும் அடிப்படையாகவும், அடிநாதமாகவும் விளங்குவது (சிவபரம்பொருள் அருளியுள்ள) ரிக்; யஜுர்; சாம அதர்வணமாகிய நால்வேதங்களே. 'வடமொழியில் அமைந்துள்ள இந்நான்கு வேதங்களுக்கும் சைவ சமயத்திற்கும் தொடர்பில்லை' என்பது போன்ற தொடர்ப் பொய்ப் பிரச்சாரங்கள் பல்கிப் பெருகி வரும் இக்கால கட்டத்தில், தக்க அகச் சான்றுகளோடு மீண்டும் மீண்டும் இது குறித்துத் தெளிவுறுத்த வேண்டியது அவசியமாகின்றது. 

'ரிக்' எனும் வடமொழிச் சொல்லை 'ருக்' என்று தமிழாக்கியும், (ராமனை 'இராமன்' என்று எழுதுமாற் போல), ருக் வேதத்தை 'இருக்கு வேதம்' எனும் சொல்லாடலோடு நம் அருளாளர்கள் தத்தமது பாடல்களில் கையாண்டு வந்துள்ளனர்.  

இனி இப்பதிவில் நம் அப்பர் சுவாமிகள் ரிக் வேதத்தினைச் சிறப்பித்துப் போற்றும் திருப்பதிகப் பாடல்களை அறிந்துணர்ந்து போலிப் பிரச்சாரங்களைப் புறந்தள்ளுவோம், 

(1) ('மறையும் ஓதுவர்' என்று துவங்கும் 'திருப்பேரெயில்' தேவாரம் - திருப்பாடல் 6)
திருக்கு வார்குழல் செல்வன சேவடி
இருக்கு வாய்மொழியால் தனைஏத்துவார்
சுருக்குவார் துயர் தோற்றங்கள் ஆற்றறப்
பெருக்குவார்அவர் பேரெயிலாளரே
-
(குறிப்பு: பேரெயிலில் எழுந்தருளியுள்ள சிவமூர்த்தி 'ரிக் வேத மந்திரங்களால் தொழுவோரின்' துயர்களைப் போக்கியருள்வார் என்று அப்பர் சுவாமிகள் பதிவு செய்கின்றார்)

(2) ('சிட்டனைச் சிவனை' என்று துவங்கும் 'திருப்பாண்டிக்கொடுமுடி' தேவாரம் - திருப்பாடல் 5)
நெருக்கி அம்முடி நின்றிசை வானவர்
இருக்கொடும் பணிந்தேத்த இருந்தவன்
திருக்கொடும்முடி என்றலும் தீவினைக்
கருக்கெடும்இது கைகண்ட யோகமே
-
(குறிப்பு: 'விண்ணுறைத் தேவர்கள் கூட்டமாக நின்று ரிக் வேத மந்திரங்களால் பணிந்தேத்தும் தன்மையில், திருபாண்டிக்கொடுமுடி இறைவர் எழுந்தருளி இருக்கின்றார்' என்று போற்றுகின்றார் நம் அப்பர் பெருமானார்)

(3) ('கடலகம் ஏழினோடும்' என்று துவங்கும் 'திருஆப்பாடி' தேவாரம் - திருப்பாடல் 3) 
எண்ணுடை இருக்குமாகி இருக்கினுள் பொருளுமாகிப்
பண்ணொடு பாடல் தன்னைப் பரவுவார் பாங்கராகிக்
கண்ணொரு நெற்றியாகிக் கருதுவார் கருதலாகாப்
பெண்ணொரு பாகமாகிப் பேணும் ஆப்பாடியாரே
-
(குறிப்பு: 'ரிக் வேத சுவரூபமாகவும் அவ்வேதம் சுட்டும் முதற்பொருளாகவும் திருஆப்பாடி இறைவர் விளங்குகின்றார்' என்று சிறப்பிக்கின்றார் நம் தாண்டக வேந்தர்)

(4) ('தொண்டனேன்' என்று துவங்கும் பொதுப் பதிகம் - திருப்பாடல் 1)
தொண்டனேன் பட்டதென்னே தூயகாவிரியி(ல்) நன்னீர்
கொண்(டு) இருக்கோதி ஆட்டிக் குங்குமக் குழம்பு சாத்தி
இண்டை கொண்டேற நோக்கி ஈசனை எம்பிரானைக்
கண்டனைக் கண்டிராதே காலத்தைக் கழித்தவாறே!!!
-
(குறிப்பு: 'ரிக் வேத மந்திரங்களால் போற்றியவாறு சிவலிங்கத் திருமேனிக்கு தீர்த்த நீராட்டாமல் காலத்தைப் போக்கினேனே' என்று வருந்திப் பாடுகின்றார் நம் நாவுக்கரசு சுவாமிகள்)

(5) ('பொருப்பள்ளி' என்று துவங்கும் பொதுப் பதிகம் - திருப்பாடல் 5)
பெருக்காறு சடைக்கணிந்த பெருமான் சேரும்
    பெருங்கோயில் எழுபதினோ(டு) எட்டும் மற்றும் 
கரக்கோயில் கடிபொழில்சூழ் ஞாழற் கோயில்
    கருப்பறியல் பொருப்பனைய கொகுடிக் கோயில்
இருக்கோதி மறையவர்கள் வழிபட்டேத்தும்
    இளங்கோயில் மணிக்கோயில் ஆலக்கோயில்
திருக்கோயில் சிவனுறையும் கோயில் சூழ்ந்து
    தாழ்ந்திறைஞ்சத் தீவினைகள் தீரும் அன்றே!!!
-
(குறிப்பு: சிவபெருமான் எழுந்தருளியுள்ள கோயில் வகைகளைப் பட்டியலிடும் நம் அப்பர் சுவாமிகள், 'மறையவர்கள் ரிக் வேத மந்திரங்களை ஓதி வழிபடும் இடம் இளங்கோயில்' என்று இத்திருப்பாடலில் பதிவு செய்கின்றார்)

(6) ('வேத நாயகன்' என்று துவங்கும் பொதுப் பதிகம் - திருப்பாடல் 8 )
அருக்கன் பாதம் வணங்குவர் அந்தியில்
அருக்கனாவான் அரனுரு வல்லனோ
இருக்கு நான்மறை ஈசனையே தொழும்
கருத்தினை நினையார் கல் மனவரே!!!
-
(குறிப்பு: இத்திருப்பாடலில் 'ரிக் முதலான நான்மறைகள்' என்று ஐயத்திற்குச் சிறிதும் இடமின்றி சைவ சமய அன்பர்களுக்கு நம் அப்பர் அடிகள் தெளிவுறுத்துகின்றார்) 

No comments:

Post a Comment