'பிதற்றாய் பிறைசூடி தன் பேரிடமே' என்று ஷேத்திரக் கோவையில் ஞானசம்பந்த மூர்த்தி அறிவுறுத்துகின்றார். அம்முறையில் நம் அப்பர் சுவாமிகளும் சிவத்தலங்களின் திருப்பெயர்களைப் போற்றுவதன் மேன்மையையும், அதனால் விளையும் அளவிலா நற்பலன்களையும் பின்வரும் அற்புத அற்புத திருப்பாடல் வரிகளால் பட்டியலிடுகின்றார்,
(1) ('நேர்ந்தொருத்தி ஒருபாகத்(து)' என்று துவங்கும் பொதுத் திருப்பதிகத்தில் இடம்பெறும் முதல் 9 திருப்பாடல்களின் இறுதி இரு வரிகள்)
பூந்துருத்தி பூந்துருத்தி என்பீராகில்
பொல்லாப் புலால் துருத்தி போக்கலாமே
நெய்த்தானம் நெய்த்தானம் என்பீராகில்
நிலாவாப் புலால்தானம் நீக்கலாமே
ஐயாறே ஐயாறே என்பீராகில்
அல்லல் தீர்ந்தமருலகம் ஆளலாமே.
பழனம் பழனமே என்பீராகில்
பயின்றெழுந்த பழவினைநோய் பாற்றலாமே.
சோற்றுத்துறை சோற்றுத்துறை என்பீராகில்
துயர்நீங்கித் தூநெறிக்கண் சேரலாமே
வலஞ்சுழியே வலஞ்சுழியே என்பீராகில்
வல்வினைகள் தீர்ந்து வான்ஆளலாமே
கண்டியூர் கண்டியூர் என்பீராகில்
கடுகநும் வல்வினையைக் கழற்றலாமே
குடமூக்கே குடமூக்கே என்பீராகில்
கொடுவினைகள் தீர்ந்தரனைக் குறுகலாமே
வெண்காடே வெண்காடே என்பீராகில்
வீடாத வல்வினை நோய் வீட்டலாமே
(2) ('மட்டுவார் குழலாளொடு' என்று துவங்கும் திருச்சிராப்பள்ளி தேவாரம் - திருப்பாடல் 3)
அரிச்சிராப் பகல் ஐவரால் ஆட்டுண்டு
சுரிச்சிராது நெஞ்சே ஒன்று சொல்லக்கேள்
திருச்சிராப்பள்ளி என்றலும் தீவினை
நரிச்சிராது நடக்கும் நடக்குமே
-
(குறிப்பு: 'திருச்சிராப்பள்ளி' எனும் திருப்பெயரினைக் காதலோடு போற்றுவோரின் தீவினைகள் (அத்தலத்துறை இறைவரான தாயுமான சுவாமியின் பேரருளால்) வேரோடு அழிந்துபடும். இது சத்தியம்; சத்தியமே என்று அறுதியிட்டுக் கூறுகின்றார்.
No comments:
Post a Comment