சிவபெருமானை நம் வாழ்நாளிலேயே நேரில் தரிசிக்க எளியதொரு வழிமுறை (அப்பர் தேவார நுட்பங்கள் - பகுதி 7)

தனிப்பெரும் தெய்வமான சிவபரம்பொருளை நேரிலேயே தரிசிக்க, யாவராலும் கைக்கொள்ளக் கூடிய ஆச்சரியமான எளிய வழிமுறை ஒன்றினை நம் அப்பர் சுவாமிகள் பின்வரும் திருப்பாடலில் வெளிப்படுத்துகின்றார்.

(1)
திருப்பாடலின் இறுதி இரு வரிகளை முதற்கண் சிந்திப்போம், சிவமூர்த்தியின் திருநாமத்தினை ஓதியவாறே அப்பெருமானைப் பலகாலம் தொடர்ந்து 'ஐயனே, என்றேனும் என் முன்னர் தோன்றி அருள மாட்டாயோ?' என்று உளமுருகி உறுதி மாறாது அழைத்துக் கொண்டே இருந்தால், 'இவன் நம்மைப் பலகாலம் இடைவிடாது அழைக்கின்றானே' என்று அக்கருணா மூர்த்தி திருவுள்ளம் மிக இரங்கி, நம்முன் வெளிப்பட்டுத் தோன்றுவாராம். 

('வெள்ளிக் குழைத்துணி போலும்' என்று துவங்கும் பொதுத் திருப்பதிகம் - திருப்பாடல் 9)
சிவனெனு(ம்) நாமம் தனக்கே உடைய செம்மேனி எம்மான்
அவனெனை ஆட்கொண்(டு) அளித்திடுமாகில், அவன்தனை யான்
பவனெனு(ம்) நாமம் பிடித்துத் திரிந்து பன்னாள் அழைத்தால்,
இவன்எனைப் பன்னாள் அழைப்பொழியான் என்(று) எதிர்ப்படுமே

'நாமம் பிடித்துத் திரிந்து' எனும் சுவாமிகளின் திருவாக்கிற்கு 'திருஐந்தெழுத்தான ஸ்ரீபஞ்சாட்சர ஜபம் மற்றும் திருமுறைப் பாராயணம்' என்று பொருள் கொள்வது சிறப்பு. 

அருமையான நெகிழ்விக்கும் வழிமுறை! இதற்குப் பிரமாணம் கூறுவது திருத்தொண்டின் தனியரசரான நம் அப்பர் சுவாமிகளன்றோ!! இன்றே அதற்கான முயற்சியினைத் துவங்குவோமா?

No comments:

Post a Comment