இராவணன் சிவ பக்தனா? (அப்பர் தேவார நுட்பங்கள் - பகுதி 5)

முதற்கண் இராவணன் பரம்பொருளான சிவபெருமானைக் குறித்து தவம் மேற்கொண்டு வரங்களைப் பெற்றவன் அல்லன், படைப்புக் கடவுளான பிரமனை வேண்டித் தவமிருந்து வரங்களைப் பெற்றவன். இதனைப் பின்வரும் திருப்பாடலில் 'அயன் அருளினில்' என்று ஞானசம்பந்த மூர்த்தி குறிக்கின்றார்,
-
(சம்பந்தர் தேவாரம் - 'புவம்வளி' என்று துவங்கும் திருச்சிவபுரப் பதிகம் - திருப்பாடல் 8 )
அசைவுறு தவ முயல்வினில் அயன் அருளினில் வருவலி கொடுசிவன்
இசை கயிலையை எழுதருவகை இருபது கரம்அவை நிறுவிய 
நிசிசரன்.. 

இனி இப்பதிவில் நம் அப்பர் சுவாமிகள் இராவணன் தொடர்பாகப் பதிவு செய்துள்ள முக்கியக் குறிப்புகளையும் உணர்ந்து தெளிவுறுவோம், 

(1)

இராவணன் புஷ்பக விமானத்தில் விண்ணில் செல்லுகையில், திருக்கயிலை மலை எதிர்ப்பட, தேர் தடைப்பட்டு நிற்கின்றது. 'ஆதிப்பரம்பொருள் எழுந்தருளியுள்ள திருமலை' என்று ஒருசிறிதும் அச்சமின்றி, 'நான் முன்னேறிச் செல்ல இம்மலை தடை செய்வதோ?' என்று கடும் ஆணவத்துடன் அதனைப் பெயர்க்க முனைகின்றான். இதுவோ சிவபக்தியின் குறியீடு? 

'பெற்ற வரபலத்தினால், அறிவில்லாமல் திருக்கயிலை மலையைப் பெயர்க்க முயன்றான் இராவணன்' என்று அப்பர் சுவாமிகள் பின்வரும் திருப்பாடலில் சாடுகின்றார்,
-
('பன்னிய செந்தமிழ்' என்று துவங்கும் திருஎறும்பியூர் தேவாரம் - திருப்பாடல் 10)
அருந்தவத்தின் பெருவலியால் அறிவதின்றி
அடலரக்கன் தடவரையை எடுத்தான் 

(2)

'இறைவரும் இறைவியும் எழுந்தருளியுள்ள திருமலை' என்று ஒருசிறிதும் மதியாது 'அம்மலையைப் பெயர்க்க முயன்றான் இராவணன்' என்று பின்வரும் திருப்பாடலில் அப்பர் அடிகள் பதிவு செய்கின்றார்,
-
('வடிவுடை மாமலை' என்று துவங்கும் திருநாகைக்காரோண தேவாரம் - திருப்பாடல் 9)
கருந்தடம் கண்ணியும் தானும் கடல்நாகைக் காரோணத்தான்
இருந்த திருமலை என்றிறைஞ்சா(து) அன்றெடுக்கலுற்றான்

(3)

'எண்தோளானே எம்பெருமான் என்றேத்தா இராவணன்' என்று 'இராவணன் இந்நிகழ்வு வரையில் சிவபெருமானிடத்து பக்தி கொண்டிருந்தவன் அல்லன்' என்று அப்பர் சுவாமிகள் தெளிவுறுத்துகின்றார்,
-
('தோற்றினான் எயிறு கவ்வி' என்று துவங்கும் திருநெய்த்தான தேவாரம் - திருப்பாடல் 10)
...எண்தோளானே
எம்பெருமான் என்றேத்தா இலங்கைக் கோனை
நெரித்தானை நெய்த்தானம் மேவினானை

(4)

'இராவணன் நேர்மையற்றவன்; நன்மை அறியாதவன்' என்று பின்வரும் திருப்பாடல்களில் அப்பர் சுவாமிகள் பதிவு செய்கின்றார்,
-
('தோற்றினால் எயிறு கவ்வி' என்று துவங்கும் திருஅவளிவணல்லூர் தேவாரம்)
நிலைவலம் வல்லன் அல்லன் நேர்மையை நினைய மாட்டான் (திருப்பாடல் 4)
நன்மை தான் அறிய மாட்டா(ன்) நடுவிலா அரக்கர் கோமான் (திருப்பாடல் 6) 

(5)

('தேரையு(ம்) மேல் கடாவி' என்று துவங்கும் திருமறைக்காடு தேவாரம்)
வலியன்என்று பொத்திவாய் தீமை செய்த பொருவலி அரக்கர்கோன் (திருப்பாடல் 7)
மிக்கமா மதிகள் கெட்டு வீரமும் இழந்தவாறே (திருப்பாடல் 8 )

(இறுதிக் குறிப்பு)
பின்னாளில் இராவணன் கைக்கொண்ட சிவபக்தியானது '1000 வருடங்கள் திருக்கயிலை மலைக்கடியில் சிக்குண்ட அச்சத்தின் வெளிப்பாடே', அன்றி அது சிவபெருமானிடத்து உள்ள அன்பினால் இயல்பாகத் தோன்றிய பக்தி அன்று. வலி பொறுக்க இயலாமல்; இசைபாடி மன்னிப்பு வேண்டிப் பாடியதால், கருணைக் கடலான சிவமூர்த்தி திருவுள்ளம் கனிந்து (அவனுடைய இக்குற்றத்தை மட்டும் மன்னித்து) நாளும் வாளும் தந்தருள் புரிகின்றார்.

No comments:

Post a Comment